
பாகிஸ்தானுக்கு உதவிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ரூ.46 லட்ச ரூபாயுடன் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கோட் சூட் அணிந்த சிலரை போலீசார் கைது செய்து அவர்களை விசாரணை செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் கருப்பு ஆடு
இவர் ஒரு எல்லை பாதுகாப்புப் படை வீரர் கேரளாவுக்கு ரயிலில் தனது ஊருக்கு போகும் போது 46 லட்சம் ரூபாயுடன் பிடிபட்டார். அவரது வீட்டில் சோதனை செய்ததில் ரூபாய் 962 கோடி சிக்கி இருக்கிறது. நமது பாரத நாட்டை காட்டிக் கொடுக்க பாகிஸ்தானிடம் இருந்து பெற்ற கைக்கூலி. இவர்தான் கருப்புஆடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் ரூ.46 லட்சத்துடன் சிக்கினார் என்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.962 கோடி சிக்கியது என்றும் ஒரு பதிவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி முடித்துள்ள சூழலில் பாகிஸ்தானுக்கு கேரளாவைச் சார்ந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் உதவி செய்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. ரூ.962 கோடி சிக்கியிருந்தால் அது மிகப்பெரிய செய்தியாகி இருக்கும். கைது செய்யப்பட்டவரை இப்படி சாதாரணமாக உட்கார வைத்து விசாரித்திருக்க மாட்டார்கள். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ எட்டு ஆண்டு பழமையானது என்பது தெரியவந்தது. 2018ம் ஜனவரி மாதம் இந்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில், “கான்பூரைச் சார்ந்த கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த ஆனந்த் காத்ரியிடம் இருந்து 96.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பழைய செல்லாத ரூபாய் 96 கோடியை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கான்பூர் பில்டரிடம் இருந்து மட்டும் அவ்வளவு செல்லாத நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த செய்தியில் இல்லை. 16 பேரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் என்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து கைது செய்யப்பட்ட நபர் இல்லை என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
அடுத்ததாக கேரளாவைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2018ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பிஎஸ்எஃப் வீரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் கைப்பற்றப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive
இவர் மேற்கு வங்கத்தில் இந்தியா – வங்கதேச எல்லையில் பணியாற்றி வந்தவர் என்றும், கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து முறைகேடாக பணம் சம்பாதித்தார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் வீட்டில் 962 கோடி ரூபாய் சிக்கியதாக எல்லாம் எந்த செய்தியும் இல்லை. யூடியூபில் இந்த செய்தி அடிப்படையில் தேடிய போது பிஎஸ்எஃப் வீரர் கைது என்று இதே வீடியோவை சிலர் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. ஆனால், ஏஎன்ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் எடுத்த வீடியோவில் இந்த நபர்கள் எல்லாம் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2018ல் பிஎஸ்எஃப் வீரர் கைது செய்யப்பட்ட செய்தியை மாற்றி, 2018ல் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்ததாக கான்பூரில் சிலர் கைது செய்யப்பட்ட வீடியோவுடன் சேர்த்து பாகிஸ்தானுக்கு உதவிய பிஎஸ்எஃப் வீரர் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தானுக்கு உதவிய எல்லை பாதுகாப்புப் படை வீரர் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
