தற்காலிக அரசு பஸ் ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பஸ்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பஸ்கள் விபத்துக்குள் சிக்கிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், "தற்காலிக ஓட்டுனர்களின் பெர்ஃபார்மென்ஸ் 🖤❤ பயணிக்கும் பொதுமக்கள் நிலை?" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். தற்போது அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தின் போது நியமிக்கப்பட்ட தற்காலிக பஸ் ஓட்டுநர்களால் விபத்து ஏற்பட்டது என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் "பேருந்தை வாய்க்காலில் இறக்கிய தற்காலிக ஓட்டுநர்" என்று குறிப்பிடப்பட்ட படத்தைப் பற்றி ஆய்வு செய்தோம். தலைப்பை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த செய்தியை புதிய தலைமுறை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. போக்குவரத்து ஊழியர்கள் அப்போதும் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்ட போது இந்த சம்பவம் நடந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

அடுத்ததாக சாலையோரம் பனை மரத்துக்கு அருகே பஸ் நிற்கும் புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த செய்தியை 2018ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தமிழ் இந்து வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் முதுகுளத்தூர் அருகே நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களும் 2018ம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

மூன்றாவதாக சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது பஸ் மோதி நிற்கும் புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம். அந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. பேருந்தில் "அரசு போக்குவரத்துக் கழகம் - கோவை" என்று இருந்தது. அதன் அடிப்படையில் தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் பிரிவு இந்த படம் பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், கோவை, திருப்பூர் வட்டத்தில் தற்காலிக போக்குவரத்துக் கழக ஊழியர்களால் விபத்து ஏற்படவில்லை என்று போக்குவரத்துத் துறை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள மூன்றில் இரண்டு புகைப்படங்கள் தற்காலிக ஓட்டுநர்களால் ஏற்பட்ட விபத்துதான்... ஆனால் அவை 2018ம் ஆண்டு நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது படம் தற்காலிக ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்து இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்போது நடந்தது என்று குறிப்பிடாததால், 2024ம் ஆண்டு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நடந்தது என்ற தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பதிவு உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பேருந்துகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையில் 2018ம் ஆண்டு நடந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்ற தகவல் மறைக்கப்பட்டு இப்போது நடந்தது போன்று பகிர்ந்துள்ளதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் பேருந்துகள் விபத்து என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Missing Context