ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இரண்டு பேர் காலணிகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ராஜஸ்தானில் பாஜக தலைவர்களின் நிலை. குஜராத் லாபியின் டிக்கெட் விநியோகத்திற்குப் பிறகு, ராஜஸ்தானில் பாஜக அனைத்து மாவட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பைக் கண்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Tamilnadu Congress media என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 அக்டோபர் 10ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என்று மும்முரமாக உள்ளன.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிருப்தி காரணமாக பாஜக நிர்வாகிகள் அடித்துக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் தேடி செய்தியை எடுத்தோம். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இது தொடர்பாக வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

பாஜக-வின் எம்.பி ஷரத் திரிபாதி, உள்ளூர் சாலை அமைக்கப்பட்டது தொடர்பான கல்வெட்டில் தன்னுடைய பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த பாஜக-வின் எம்.எல்.ஏ ராகேஷ் பாகல் இது தன்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டது என்று கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ஷரத் திரிபாதி, தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்கிறார். மற்ற பாஜக நிர்வாகிகள் அவர்களது சண்டையை நிறுத்த முயன்றனர். கடைசியில் காவலர் ஒருவர் வந்து சண்டையை விலக்கிவிட்டார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

பாஜக எம்.பி, எம்.எல்.ஏ காலணியால் அடித்துக்கொண்ட வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது இல்லை. 2019ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராஜஸ்தானில் வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததால் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ 2019ல் உ.பி-யில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராஜஸ்தானில் பாஜக நிர்வாகிகள் அடித்துக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Partly False