
அயோத்தியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையத்தின் தோற்றம் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அயோத்தி ரயில் நிலையம் என்று குறிப்பிட்டு மாதிரி புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “அயோத்தி ராமர் கோவில் ரயில் நிலையம் புதிய தோற்றம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவானது ஃபேஸ்புக்கில் நவம்பர் 4, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
அயோத்தி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் என்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில போலியான புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி நகர் ரயில் நிலையத்தின் வீடியோவை அயோத்தி ரயில் நிலையம் என்று தவறாக வதந்தி பரப்பினர். அதன் பிறகு டெல்லியில் கட்ட திட்டமிடப்பட்ட ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை அயோத்தி என்று வதந்தி பரப்பினர்.
தற்போது அயோத்தி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படம் என்று சில புகைப்படங்களை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, அயோத்தியில் சீரமைக்கப்படும் ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்று இந்திய ரயில்வே வீடியோ, புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டிருந்தது. அதற்குத் துளியும் தொடர்பில்லாத வகையில் இந்த புகைப்படங்கள் இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, The Madhya Pradesh Index @mp_index என்ற எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், @Amarrrrz என்ற எக்ஸ் (ட்விட்டர்) ஐடி கொண்டவர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய அயோத்தி ரயில் நிலையம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அயோத்தியின் புதிய தோற்றம் தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்ட வீடியோக்கள், பதிவுகளைத் தேடி எடுத்தோம். சமீபத்தில் இந்திய ரயில்வே வெளியிட்டிருந்த அயோத்தி ரயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானம் தொடர்பான புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் இது தொடர்பாக கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், அயோத்தி ரயில் நிலையம் என்பதை ஆங்கிலத்தில் தவறாக எழுதியிருப்பதை சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும் ஏஐ தொழில்நுட்பத்தில் இப்படி புகைப்படம் உருவாக்கும் போது எழுத்துக்களை பயன்படுத்தும் போது ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள பிரச்னை பற்றியும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உண்மையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தின் மாதிரிகள் இல்லை, இவை ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு தனிப்பட்ட நபரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
அயோத்தியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில் நிலையத்தின் தோற்றம் என்று பரவும் புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் அதற்கும் இந்திய ரயில்வே துறை உருவாக்கிவரும் அயோத்தி ரயில் நிலையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அயோத்தி ரயில் நிலையத்தின் புதிய தோற்றம் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
