
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
மால், விமானநிலையம் போன்ற பிரம்மாண்ட கட்டிடத்தின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றிழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி. இந்தியா பூராவும் இவரை போன்ற ஸ்வாமிகளின் காலடியில் கிடத்தினால், ராஜ்ய பரிபாலனம் மிளிர, சனாதனம் செழிக்க வாழலாம்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சியில் பிரம்மாண்ட பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள சூழலில், அதை விட பிரம்மாண்டமான பேருந்து நிலையம் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் எந்த ஊரில் இந்த பேருந்து நிலையம் உள்ளது என்ற தகவலை அளிக்கவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் இப்படி பிரம்மாண்ட பஸ் நிலையத்தையோ, ரயில் நிலையத்தையோ, விமான நிலையத்தையே யோகி ஆதித்யநாத் மற்றும் இந்திய அரசு அமைத்ததாக செய்திகள் ஏதும் இல்லை. மேலும் வீடியோவை பார்க்க வெளிநாடு போல தெரிந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. சீனா அரசு ஊடகம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad and Tobago) நாட்டுக்கான சீன தூதரகம் உள்ளிட்ட பல சீன சார்பு சமூக ஊடக பக்கங்களில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில் “சீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சோங்கிங்(Chongqing) கிழக்கு ரயில் நிலையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூகுள் ஸ்ட்ரீட் மேப்-ல் இதன் உள்புற புகைப்படங்கள் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்த ரயில் கட்டப்படுவது தொடர்பாக வெளியான சீன ஊடக செய்திகள், புகைப்படங்கள் நமக்கு கிடைத்தன.
மேலும், இந்த ரயில்நிலையம் பற்றி பலரும் வீடியோ வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அவற்றில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற பகுதிகளைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ சீனாவின் சோங்கிங் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
சீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட ரயில் நிலையத்தின் வீடியோவை உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:உத்தரப்பிரதேச பஸ் நிலையம் என்று பரவும் சீனா ரயில் நிலையத்தின் வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False


