
விவசாயிகள் போராட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் சீக்கியர் போல வேடமிட்டு பங்கேற்றுள்ளார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தெளிவில்லாத புகைப்படம் ஒன்றை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “விவசாய போராட்டத்தில் மீசை இல்லாத சிங். எங்காவது முறுக்கிய மீசை இல்லாத சிங்கை பார்த்திருக்கீங்களா?
விவசாயிகள் போராட்டத்திற்கு, விவசாயிகளை விட, எதிர் கட்சிகளை விட, மொத்த கொள்முதல் ஏஜன்ட்களை விட, கிருத்துவர்களும் முஸ்லிம்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Jaya Sundara Raj என்பவர் டிசம்பர் 6, 2020 அன்று பதிவிட்டுள்ளார்.
Jaya Sundara Rajஐப் போல ஃபேஸ்புக் பக்கத்தில் ஏராளமானவர்கள் இந்த பதிவை பதிந்து ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் மத்திய அரசுக்கு எந்த ஒரு போராட்டம் நடந்தாலும் அதன் பின்னணியில் சிறுபான்மை மதத்தவர்கள்தான் உள்ளனர் என்று கூறி, அவர்களை தேச விரோதிகள் போல சித்தரிக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவசாயிகள் பிரச்னைக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அதை திசை திருப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருவதை சமூக ஊடகங்களில் காண முடிகிறது.
இந்த மீசை இல்லாத சீக்கியரை, இஸ்லாமியர் என்று கூறுகின்றனர். டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நபர் என்று குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி இவர் இஸ்லாமியர் என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரத்தையும் கூறவில்லை. புகைப்படமும் தெளிவின்றி மிகவும் அலசலாக உள்ளது.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் இந்த படத்தை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
இவற்றுக்கு நடுவே இந்துஸ்தான் லைவ் (Hindustan LIVE Farhan Yahiya) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோ ஒளிபரப்பில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள நபர் இருப்பதாக ஒரு வீடியோ கிடைத்தது. அதைப் பார்த்தோம். 2.50வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நபரைக் காண முடிந்தது. தெளிவான அந்த வீடியோவில் அவருக்கு மீசை இருப்பதை காண முடிந்தது. பேட்டி அளிப்பவருக்கு அருகே கை கட்டியபடி அவர் நிற்கிறார். அவருக்கு மீசை இருப்பதைக் காண முடிகிறது. மீண்டும் 7.29வது நிமிடத்தில் அவரை காண முடிந்தது.
இந்த வீடியோ காட்சியை எடுத்து எடிட் செய்து மீசை இல்லாத இஸ்லாமியர் சீக்கியர் போல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றார் என்று குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. தெளிவான படத்தைப் போட்டால் போட்டோஷாப் எடிட்டிங் தெரிந்துவிடும் என்பதற்காக படத்தை அலசலான படம் போல மாற்றி வெளியிட்டிருப்பதும் உறுதியாகிறது.
விவசாயிகள் போராட்டத்தில் சாதி, மத வித்தியாசமின்றி இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்ளாமல் வழக்கமான தங்கள் அடையாளங்களுடனே பங்கேற்று வருவதையும் காண முடிகிறது. இதன் மூலம் சீக்கியர் ஒருவரின் படத்தை போட்டோஷாப் முறையில் அவருடைய மீசையை அகற்றிவிட்டு, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர் என்று விஷமத்தனமாக பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
முடிவு:
சீக்கியர் ஒருவரின் படத்தை எடிட் செய்து சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியர் என தவறான தகவல் சேர்த்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் வேடத்தில் இஸ்லாமியரா?- மீண்டும் ஒரு விஷம பதிவு!
Fact Check By: Chendur PandianResult: False
