அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கண்டனம் – ஈபிஎஸ் எதிர்ப்பு. எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணாமலை போன்றவர்கள், இது போன்ற நிகழ்ச்சிகளை சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டும் – எடப்பாடி பழனிசாமி” என்று இருந்தது.

இந்த பதிவைத் தாரைப்பிதா என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜீ தமிழ் டிவி-யில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் சிறுவர்கள் இரண்டு பேர், பிரதமர் மோடியைக் கிண்டல் செய்யும் வகையில் காட்சி இருந்ததாக பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் முருகனிடம் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று முருகன் உறுதி அளித்ததாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் சிறுவர்களை மிரட்டிய அண்ணாமலை, சிறுவர்களுக்கு எதிராக போராடிய அண்ணாமலை என்று சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல் செய்யும் வகையில் பல பதிவுகள் வெளியாகின. இவற்றுக்கிடையே, சில செய்தி ஊடகங்கள் வெளியிட்டது போன்ற தவறான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அண்ணாமலையின் செயலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் ஜனவரி 17, 2022 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட அந்த நாளில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற எந்த நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிய போது ஜனவரி 11ம் தேதி இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் இருந்தது போன்று தகவல் இல்லை.

அதில், “பொங்கல் தொகுப்பு – ஈபிஎஸ் குற்றச்சாட்டு. பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொங்கல் தொகுப்பை எடுத்துச் செல்ல ரேஷன் கடைகளில் பைகள் வழங்கப்படுவதில்லை. பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம் தரமானதாக இல்லை – எடப்பாடி பழனிசாமி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறாக வெளியிட்டிருப்பது உறுதியானது. 

இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டுதான் என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜீ டிவி-யில் மோடி கிண்டல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலையின் நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check By: Chendur Pandian 

Result: False