நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டது சரி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே! மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசே சரி செய்துவிடும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்! - எடப்பாடி பழனிசாமி" எனறு இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டானது ஃபேஸ்புக்கில் 2023 டிசம்பர் 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத்தில் வண்ண பொடி தாக்குதல் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றது போல பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி எடப்பாடி பழனிசாமி கூறியதாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத நிலையில், இந்த நியூஸ் கார்டை பார்க்க கிட்டத்தட்ட ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டு போலவே உள்ளதால் இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி நெல்லையில் அளித்த பேட்டி தொடர்பான நியூஸ் கார்டு மட்டுமே நமக்கு கிடைத்தது. எனவே, ஜூனியர் விகடன் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம்.

நம்மைத் தொடர்புகொண்ட விகடன் டிஜிட்டல் பொறுப்பாளர், இந்த நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. இது போலியானது என்று உறுதி செய்தார்.

142 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வரவேற்று எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் அப்படி எந்த பதிவும் இல்லை. ஜூனியர் விகடன் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

142 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அதிமுக வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானத என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False