
‘’பச்சை பொடி கலந்து தயாரிக்கப்படும் பச்சை பட்டாணி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim | Archived Video Link |
Prakash Iyer என்பவர் இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து அதன் மேலே, ‘’இனிமே பச்சை பட்டாணி கேப்பியா, கேப்பியா‘’, என எழுதியுள்ளார். வீடியோவில், உணவுப்பொருள் போன்ற ஒன்றை மூட்டைகளில் இருந்து கொட்டி, அதனுடன் பச்சை நிறம் சேர்த்து, மூட்டை கட்டுவதைக் காண முடிகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை மீண்டும் ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அப்போது, அதில் மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு வகைஉணவுப் பொருளில் பச்சை நிறத்தைச் சேர்ப்பதைக் காண முடிகிறது. இதன் பின்னணியில் வயல்வெளி, டிராக்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன. விவசாய நோக்கத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என தோன்றுகிறது.

இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் இதுபற்றி ஏதேனும் வீடியோ ஆதாரம் தென்படுகிறதா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, குஜராத்தி மொழியில் வெளியாகியிருந்த ஒரு வீடியோ லிங்க் கிடைத்தது.
இந்த வீடியோவில் ‘’சமூக ஊடகங்களில் மஞ்சள் பட்டாணியில் கலர் கலந்து பச்சை பட்டாணியாக மாற்றுவதாக தகவல் பரவுவதன் பின்னணி,’’ எனக் கூறியுள்ளனர். பிறகு, வீடியோவின் உள்ளே ‘’Fungicidal Coating on Wheat Seeds என்ற பெயரில் பதிவிடப்பட்ட வீடியோவை இவ்வாறு தவறான தகவலுடன் சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். 2.36வது நிமிடத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கண்ட தலைப்பில் ஏதேனும் வீடியோ உள்ளதா என யூடியுப்பில் தகவல் தேடினோம். அப்போது, Fungicidal Coating on Wheat Seeds எனும் தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ கிடைத்தது. இந்த வீடியோவையே பலரும் ஃபேஸ்புக்கில் தவறான தகவலுடன் பகிர்ந்துள்ளனர். அதனை ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
இந்த வீடியோவை Satpal Singh என்பவர் பகிர்ந்துள்ளார். அதிலேயே, இது எதற்காகச் செய்யப்படுகிறது என்பது பற்றிய விளக்கம் அளித்துள்ளார். இதன்பேரில், நாமும் கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, தமிழக அரசின் வேளாண் பல்கலைக்கழகம் இதுபற்றி வெளியிட்டிருந்த விளக்கம் கிடைத்தது. அதனை முழுதாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி கோதுமை விதைகளில் பூஞ்சை தொற்று ஏற்படாமல் தவிர்க்க, இத்தகைய ரசாயன பூச்சு, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செய்யப்படுகிறது. இந்த வீடியோவை தவறான அர்த்தம் செய்து, பச்சை கலந்து பச்சை பட்டாணி தயாரிக்கப்படுவதாக, வதந்தி பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த வீடியோ பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பச்சை பட்டாணிக்கு பச்சை நிறம் சேர்க்கப்படும் வீடியோ: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False

நான் சந்தையில் பாக்கட் போட்டு விற்கும் பச்சை பட்டாணி தண்ணீரில் ஊறவைத்த போது தண்ணீர் பச்சை கலராக மாறியிருந்தது
தகவலுக்கு நன்றி ஆனாலும் நான் பகிச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் கொட்டினேன் அதில் தண்ணீரை ஊற்றிய சற்று நேரத்தில் பச்சை நிற சாயம் இருப்பதாக உணறந்தேன் மேலும் இத்தகவல் இஉண்மை இல்ல பட்சத்தில் நான் பகிறந்ததை திரும்ப பெறுகிறேன் நன்றி .
பச்சை பட்டாணி என நினைத்து தவறான வீடியோவை நான் சேர் செய்ததற்கு இங்கு என் வருத்தத்தை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு சம்பத்தப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.