
“ராஜீவ் காந்தி மரணம் பற்றி சீமான் பேசியது அபத்தம். மனநிலை சரியில்லாதவர் கூட அப்படி பேசமாட்டார்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. 2019 அக்டோபர் 16ம் தேதி அந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “சீமான் சர்ச்சை – ரஜினி கருத்து. ராஜீவ்காந்தி மரணம் குறித்து சீமான் பேசியது அபத்தமானது, மனநிலை சரியில்லாதவர் கூட அப்படி பேச மாட்டார் – விமான நிலையத்தில் ரஜினி பேட்டி” என்று உள்ளது. விமானநிலையத்தில் எடுக்கப்பட்டது போன்ற படத்தையும் அந்த நியூஸ் கார்டில் வைத்துள்ளனர்.
பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டதுபோலவே உள்ளது. இந்த நியூஸ் கார்டை B Ram Kumar Bjp என்பவர் 2016 அக்டோபர் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் பேச்சுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரவியது. அது பழைய அறிக்கை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டது.
puthiyathalaimurai.com | Archived Link |
இந்த நிலையில், சீமானின் பேச்சை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அக்டோபர் 16, 2019 தேதியிடப்பட்ட அந்த நியூஸ் கார்டு பார்க்க அசல் போலவே தெரிவதால் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் இமயமலை சென்றார். அங்கு ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார். ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. ரிஷிகேஷில் இருந்து சென்னை திரும்பிவிட்டாரா, சென்னை விமானநிலையத்தில் பேட்டி ஏதும் அளித்துள்ளாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
Thanthi TV | Archived Link | Search Link |
இந்த நியூஸ் கார்டு நிஜமா என்று புதியதலைமுறை ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அக்டோபர் 16ம் தேதி ரஜினி தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

மேலும், புதியதலைமுறை நியூஸ் கார்டுக்கும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுக்கும் பல வேறுபாடுகள் இருந்தது தெரிந்தது. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக இருந்தது. பின்னணி டிசைன் மற்றும் வாட்டர் மார்கில் வேறுபாடுகள் தெரிந்தன.
புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டையும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டையும் fotoforensics ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் அசல் நியூஸ் கார்டில் வாட்டர் மார்க் டிசைன் உள்ளிட்டவை கோடு கோடாக தெரிந்தது. ஆனால், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் ரஜினிகாந்த் பேட்டி என்று குறிப்பிட்ட பகுதி தனியாக எடிட் செய்து வைக்கப்பட்டதும், அதில் டிசைன் இல்லாமல் இருப்பதும் தெரிந்தது.

இது தொடர்பாக புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவை தொடர்புகொண்டு கேட்டோம். நாங்கள் வெளியிட்டது இல்லை, போலியானது, என்றனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்தார் என்று வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சீமானை விமர்சித்த ரஜினிகாந்த்; பரபரப்பை ஏற்படுத்தும் நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
