
‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்கு கேட்டு வந்த BJP MLA வை ஒட ஒட விரட்டி அடிக்கும் பொது மக்கள்…!,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோ மணிப்பூரில் நிகழ்ந்தது எனக் கூறினாலும், அதனை உற்றுப்பார்த்தால் லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் நடைபெற்ற சம்பவம் போல தோன்றுகிறது. இதன்பேரில், கூகுள் இணையதளம், யூ ட்யூப் உள்ளிட்டவற்றில் நீண்ட நேரம் தகவல் ஆதாரம் தேடினோம். அப்போது, ‘’ ¿Arrojan al alcalde de Ecatepec a un canal de aguas negras?,’’ என்ற தலைப்பில் யூ ட்யூப்பில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றின் விவரம் கிடைத்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.
செப்டம்பர் 17, 2019 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பை கூகுளில் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அப்போது, Is the mayor of Ecatepec thrown into a sewage canal, என அர்த்தம் கிடைத்தது.
இதையடுத்து Ecatepec என்பது எங்கு உள்ளது என விவரம் தேடினோம். அப்போது, அது மெக்சிகோ நாட்டில் உள்ள நகரம் என தெரியவந்தது.
இதன்பேரில் மீண்டும் ஃபேஸ்புக், ட்விட்டரில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என விரிவாக தேடினோம். அப்போது, Portal Engomadeira என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ பகிரப்பட்ட விவரம் கிடைத்தது.
11, மே , 2019 அன்று பகிரப்பட்ட அந்த வீடியோவின் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்த்தால் இந்த வீடியோ மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தது இல்லை. உண்மையில், இது பிரேசில் நாட்டில் நிகழ்ந்த சம்பவம் பற்றியதாகும்.

Facebook Link | Archived Link |
இதன்படி, பிரேசில் நாட்டில் உள்ள பாஹியா மாகாணத்தின் Engomadeira என்ற பகுதியில் நிகழ்ந்த சம்பவம் இதுவாகும்.

மேலே உள்ள வீடியோவில் முதலில் தாக்கப்படும் நபர், பிறகு இயல்பாக பேசுவதைக் காண முடிகிறது. பொதுமக்கள் சேர்ந்து சித்தரிக்கப்பட்ட சம்பவமாக இந்த வீடியோவை எடுத்துள்ளதாக, தெரிகிறது.
மே மாதத்தில் பிரேசிலில் இருந்து பகிரப்பட்ட வீடியோவை எடுத்து மெக்சிகோ நாட்டில் மேயர் தாக்கப்பட்டதாகச் சிலர் தகவல் பகிர, அது படிப்படியாக உலகம் முழுக்க பரவியுள்ளது. இதுபற்றி ஆப்ரிக்காவில் கூட உண்மை கண்டறியும் சோதனை செய்து உண்மையை நிரூபித்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முழுக்க மெக்சிகோவில் நிகழ்ந்த சம்பவம் எனக் கூறி பரவிய வதந்தி இந்தியா வந்ததும், மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை அடித்த பொதுமக்கள் எனக் கூறி, தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது.
எனவே, இது மணிப்பூரிலும் நடக்கவில்லை; மெக்சிகோவிலும் நடக்கவில்லை. உண்மையில், பிரேசில் நாட்டில் நிகழ்ந்ததாகும். கடந்த மே மாதம் முதலாக இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட வீடியோ செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, வீடியோ மற்றும் புகைப்படங்களை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
