
மகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “சாதியை ஒழிங்கடா, இல்ல சாதி வெறி பிடித்தவர்களை ஒழிக்கனும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Farook Mukasha Hajrul என்பவர் 2020 ஜூன் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குழந்தைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாதி காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, 2017ல் மும்பையில் உணவுப் பொருள் திருடியதற்காக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த செய்திகளைப் பார்த்தோம்.

2017 மே 21ம் தேதி டி.என்.ஏ என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், “8, 9 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் டவுன்ஷிப் பிரேம் நகர் பகுதியில் உள்ள கடைத்தெருவுக்கு வந்துள்ளனர். அங்கு கடை ஒன்றிலிருந்த நொறுக்குத்தீனி பாக்கெட் ஒன்றை எடுத்து பிரித்து சாப்பிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் மஹ்மூத் பதான் (69) அவர்களை பிடித்துள்ளார். பின்னர் மேமூத் பதானின் மகன்கள் இர்ஃபான் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து சிறுவர்களை அடித்து, தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து, அந்த பகுதியில் அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மஹ்மூத் பதான், இஃர்பான், சலீம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மீது செக்ஷன் 355 (தாக்குதல் அல்லது அவமரியாதை செய்யும் நோக்கத்துடன் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுதல்), செக்ஷன் 500 (அவதூறு வழக்கு), 323 (வேண்டுமென்றே தாக்கி காயம் ஏற்படுத்துதல்) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தனர்.
https://youtu.be/bxPTz3PHaMU
என்.டி.டி.வி உள்ளிட்ட பல ஊடகங்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

சிறுவர்கள் மீதான தாக்குதல் சாதி ரீதியானது இல்லை, திருட்டு சம்பந்தமானது என்று தெரிகிறது. நாம் ஆய்வு செய்த பதிவுக்கு கமெண்ட் செய்த பலரும் இதை குறிப்பிட்ட மதத்துக்குள் நடக்கும் செயல் என்ற வகையில் பதிவிட்டிருந்தனர். எனவே, இந்த பதிவு மிஸ்லீட் செய்யக் கூடியது என்பது தெளிவாகிறது.

நம்முடைய ஆய்வில்,
உணவுப் பொருள் திருடியதாக சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை.
இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில்தான் நடந்துள்ளது.
ஆனால், சிறுவர்களின் சாதி பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இஸ்லாமில் சாதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அவர்கள் சாதி வெறியோடு தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறுவது எந்த அளவுக்கு சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பசி கொடுமையால் உணவு திருடிய சிறுவர்கள் மீது சாதி அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று வெளியான பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் கலந்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
