
இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் என்று இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில், தாயும் மகளும் கதறி அழும் காட்சி உள்ளது. இரண்டாவது புகைப்படத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகு மற்றும் பின்புறத்தில் அடிவாங்கிய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படங்கள் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை.
இந்த புகைப்படங்களை Sibichander Dhanaraj என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 செப்டம்பர் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டிருக்கிற காஷ்மீர் கொடூரங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ நீக்கியதைத் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பாக பல வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் அங்கிருந்து எப்படி நாட்டின் பிற பகுதிக்கு பரவும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இப்படி வைரலாக பரவும் வீடியோ, புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறோம்.
காஷ்மீரில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் |
இந்திய அரசை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம் |
காஷ்மீர் மாணவிகள் போராட்டம் |
காஷ்மீர் சிறுவர் சிறுமியரை கொன்ற ராணுவம்! |
இந்த நிலையில், இரண்டு மனதை உலுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். முதலில், தாயும் மகளும் அழும் நெஞ்சை உருக்கும் படம் பற்றி ஆய்வு செய்தோம். அந்த படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி அவர்கள் யார், எங்கே, எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று கண்டறிய முயன்றோம்.
நம்முடைய தேடுதலில், அந்த புகைப்படத்தின் உண்மை தகவல் நமக்கு கிடைத்தன. இந்த புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டதுதான். ஆனால், 2004ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. Reuters செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞர் எடுத்த இந்த புகைப்படத்தை அடோப் நிறுவனத்தில் விற்பனைக்கு உள்ளது நமக்கு தெரிந்தது. அதில், 2004ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி ஶ்ரீநகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக தங்கள் உறவினர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அவர்கள் அழுவதாக குறிப்பிட்டு இருந்தனர்.
அடோப் விற்பனை | Archived Link |
இந்தியா டுடே | Archived Link |
தொடர்ந்து தேடியபோது, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த புகைப்படத்தை பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ஷேர் செய்தாக தெரியவந்தது. அதன் அடிப்படையில், இந்தியா டுடே, ஆல்ட் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தியதும் நமக்குக் கிடைத்தது.
இரண்டாவது படத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். இதையும் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஆண்டுகளாக இந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
தொடர்ந்து தேடியபோது, இதுவும் adobe நிறுவனம் விற்பனைக்கு வைத்துள்ள படம் என்று தெரிந்தது. அதில், 2016ம் ஆண்டு காஷ்மீரில் ஒரு வாரத்துக்கு மேல் நீடித்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் தாக்கிய நபர் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அடோப் புகைப்பட விற்பனை | Archived Link |
நம்முடைய ஆய்வில்,
காஷ்மீர் தொடர்பாக தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டு படங்களும் காஷ்மீரில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் இருக்கும் படம் 2004ம் ஆண்டில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காயம் அடைந்த நபர் புகைப்படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பழைய படங்களை பயன்படுத்தி இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் என்று தவறான தகவல் பரப்பப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ள காஷ்மீர்… வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
