
ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்த கடற்கரையில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார் என்று சமூக ஊடகங்களில் பல படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
நான்கு புகைப்படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். முதல் படத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் முழு கடற்கரையையும் சோதனை செய்தனர் என்று உள்ளது. இரண்டாவது படத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் பை நிறைய இருப்பது போல உள்ளது. அந்த பிளாஸ்டிக் குப்பைகள் கடற்கரையில் வீசப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது படத்தில், வீடியோ ஷூட்டிங் குழுவினர் உள்ளனர். அந்த படத்தின் மீது, படப்பிடிப்புக்குத் தயாரான குழுவினர் என்று குறிப்பிட்டுள்ளனர். நான்காவது படத்தில் பிரதமர் மோடி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றுகிறார். அதில், ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது என்று எழுதியுள்ளனர்.
இதன் மூலம், சென்னை அருகே உள்ள கோவளத்தில் பிரதமர் தங்கியிருந்தபோது சுத்தப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்பட்டு, அவற்றை பிரதமர் மோடி சுத்தம் செய்வது போல வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்த பதிவை Kaviarasan Thirugnanam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை தங்கள் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இரண்டாவது கட்ட அதிகாரப்பூர்வ சந்திப்பு அக்டோபர் 11, 12ம் தேதிகளில் நடந்தது. அப்போது பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். 12ம் தேதி காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தபோது, கடலில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில அவதூறு தகவலும் பரவ ஆரம்பித்தது.
puthiyathalaimurai.com | Archived Link |
இந்த நிலையில், பிரதமர் வருகை காரணமாக பல கட்டங்களில் நடந்த தூய்மைப் பணியைத் தாண்டி எப்படி குப்பை வந்தது என்றும் வேண்டுமேன்றே குப்பைகளைப் போட்டு அதை அகற்றுவது போல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் என்றும் கூறி பல படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
முதலில் பாதுகாப்பு அதிகாரிகள் கடற்கரையை சோதனை செய்யும் படத்தை ஆய்வு செய்தோம். அந்த படத்தைப் பார்க்கும்போது பின்னணியில் மக்கள் பலரும் இருப்பது தெரிகிறது. உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட சூழலில், பொது மக்கள் அந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது படத்தில் மக்கள் கூட்டமாக இருப்பது நெருடலை ஏற்படுத்தியது. எனவே, படத்தை மட்டும் தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
Search Link | The Hindu | Archived Link |
நம்முடைய தேடலில், இந்த புகைப்படம் பிரதமர் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட படம்தான் என்பது உறுதியானது. ஆனால், இடமும் நாளும் மட்டுமே வேறு. 2019 ஏப்ரல் 11ம் தேதி கோழிக்கோடு டேட்லைனோடு தி இந்து வெளியிட்ட செய்தியில் இந்த புகைப்படம் இருந்தது. அதில், பிரதமர் மோடியின் கோழிக்கோடு வருகையையொட்டி கடற்கரையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு நடத்தினர் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர். இதன் மூலம் முதல் படம் போலியானது என்பது உறுதியானது.
இரண்டாவதாக குப்பை சேகரிக்கும் அல்லது குப்பையை வீசும் படத்தை ஆய்வு செய்தோம். அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது நமக்குக் கிடைக்கவில்லை. கடற்கரையை சுத்தம் செய்தல் என்று டைப் செய்து தேடியபோது ஆயிரக்கணக்கான படங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து தேடி கண்டுபிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.
மூன்றாவதாக படப்பிடிப்புக் குழுவினர் படத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். படத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வெளிநாட்டினர் போல இருந்தனர். மேலும் படத்தில், கடல் அலைகளுக்கு அந்தப் பக்கத்தில் நிலப்பரப்பு தெரிந்தது. கோவளத்தில் அப்படியான நிலப்பரப்பு இல்லை. எனவே, வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றியது.
Search Link | tayscreen.com | Archived Link |
படத்தை, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது www.tayscreen.com என்ற இணையதளத்தை அது காட்டியது. அந்த இணையதளத்தில் படக்குழுவினர் புகைப்படம் முழுவதுமாக நமக்கு கிடைத்தது. அலைகளுக்கு அந்தப் பக்கம் உள்ள நிலப்பரப்பில் மிகப்பெரிய கட்டிடங்கள் எல்லாம் உள்ளன. எனவே இந்த புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டது என்று உறுதியானது.
அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. அந்த இணையதளத்தில் உள்ள புகைப்படங்களைத் தொடர்ந்து தேடியபோது இந்த புகைப்படம் 2012ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. படப்பிடிப்பு குழுவினர் என்று தலைப்பிட்டு இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
கோழிக்கோடு கடற்கரையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு குழுவினர் சோதனை நடத்திய புகைப்படத்தை கோவளத்தில் எடுத்தது என்று பகிர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தை, மோடியின் நடைப் பயிற்சியை படம்பிடிக்கும் படக்குழு என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பிரதமர் மோடி கடற்கரையில் படக் குழுவினர் முன்னிலையில் வேண்டுமேன்றே குப்பைகளைக் கொட்டி அதை மீண்டும் அகற்றினார் என்று குறிப்பிடப்படும் தகவல் பொய்யானது விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோவளம் கடற்கரையில் பாதுகாப்பு சோதனை; மோடி பற்றிய படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False

Idhey pola india porulaadharam nandraga ulladhu endra thappa seidhi paravuthu atha first check pannunga beach kuppaya illayanga fact check naatuku romba mukiyam…jalrs check nu unga site name maathunga