உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

புதிய இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உபி வருமான வரித்துறை துணை கமிஷ்னர் வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள்..!! பாஜக டவுசர்கள் கருப்பு பணத்தை ஒ(ளி)ழித்த டிசைன், அடடே..!!” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Samuel Raj என்பவர் 2020 ஏப்ரல் 28 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அப்படி இருக்கும்போது உ.பி-யில் வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் சோதனை நடந்தது என்ற தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது தொடர்பாக செய்தி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

Search Link

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இணைய ஊடகங்களில் வெளியான வருமான வரித்துறை சோதனை தொடர்பான செய்திகள் பலவற்றில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தி இருப்பது தெரிந்தது. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்தபோது கடைசியாக 2017 ஏப்ரல் மாதம் வெளியான செய்தி ஒன்றில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

பண மதிப்பிழப்பு, புதிய ரூபாய் நோட்டுக்கள் வெளியீடு என்பது 2016 நவம்பரில் நடந்தது. இந்த செய்தி ஏப்ரலில் வெளியாகி இருந்தது. எனவே, உண்மையில் இந்த செய்தியின் படமாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம்.

zeenews.india.comArchived Link

அந்த செய்தியில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விற்பனை வரித் துறை கூடுதல் ஆணையர் வீட்டில் சோதனையிட்டபோது கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

Archived Link

சிஎன்என் நியூஸ்18 தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரல் 21, 2017ல் வெளியிட்ட பதிவிலும் இந்த படத்தைப் பயன்படுத்தியிருந்தது. அதிலும், வியாழக்கிழமை உ.பி விற்பனை வரி கூடுதல் ஆணையர் வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டு என்று குறிப்பிட்டிருந்தனர்.

rediff.comArchived Link 1
millenniumpost.inArchived Link 2

தொடர்ந்து தேடியபோது பல செய்திகள் நமக்கு கிடைத்தன. அனைத்திலும் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஏப்ரல் 20, 21, 2017க்கு முன்னதாக இந்த புகைப்படம் பயன்படுத்தியதாக வேறு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உ.பி விற்பனை வரித்துறை அதிகாரியின் வீட்டில் சோதனையிட்ட போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், உ.பி-யில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனையிட்ட போது கிடைத்த பணம் என்ற தகவல் தவறானது என்பதும் வருமான வரித்துறையினர், உ.பி மாநில விற்பனை வரித்துறை அதிகாரியின் வீட்டில் சோதனையிட்ட போது இந்த பணம் சிக்கியது என்பதே உண்மை என்றும் தெரியவருகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உ.பி வருமான வரித்துறை துணை கமிஷனர் வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியதா?

Fact Check By: Chendur Pandian 

Result:Partly False