
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
Venkat Ramanujam என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 31ம் தேதி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “5.5 லட்சம் தீபாவளி விளக்கு ஏற்றிய செலவு 133 கோடி : பாஜக யோகி அரசு. 1 அகல் விளக்கு 2418 ரூபாயா… ஓ ..ஆன்மிக ஊழல் இதுதானா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்த பிறகு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையும் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடந்த தீபாவளி விழாவுக்கு அரசு தரப்பிலிருந்து ரூ.133 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.கூகுளில், “ரூ.133 கோடி செலவு செய்து தீபாவளி கொண்டாடிய யோகி ஆதித்யநாத் அரசு” என்று டைப் செய்து தேடியபோது ஊடகங்களில் பரவிய தவறான தகவல் என்ற செய்தி கிடைத்தது.
Search Link |
தொடர்ந்து தேடியபோது ஊடகங்களில் ரூ.133 கோடி செலவில் தீபாவளி கொண்டாட யோகி அரசு திட்டமிட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியான தகவல் நமக்கு கிடைத்தது.
ஆனால், அந்த செய்தி அகற்றப்பட்டு இருந்தது தெரிந்தது. ஆனால், சமூக ஊடக பக்கங்களில் அந்த செய்தியின் படம் இன்னும் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
மேலும், உ.பி அரசு ரூ.133 கோடி செலவு செய்யவில்லை, ரூ.1.33 கோடிதான் செலவு செய்தது என்று வெளியான பல செய்திகளும் நமக்கு கிடைத்தன. தி பிரிண்ட் வெளியிட்டிருந்த செய்தியில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இருந்தனர். அதில், தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் 5.5 அகல் விளக்குகள் ஏற்ற ரூ.133 கோடி செலவு செய்ய உள்ளதாகவும் உ.பி அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதே செய்தியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகமும் வெளியிட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த செய்தியில், இது தொடர்பாக யோகி அரசு 2019 அக்டோபர் 22ம் தேதி ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ரூ.132.7 லட்சம் செலவில் இந்த விளக்கேற்றும் பணி நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு ரூ.133 கோடி என்று செய்தி வெளியிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
theprint.in | Archived Link |
உ.பி அரசின் இணையதளத்துக்கு சென்று பத்திரிகை செய்திகளைத் தேடிப் பார்த்தோம். அப்போது 2019 அக்டோபர் 22ம் தேதி வெளியான பத்திரிகை செய்தி ஒன்று கிடைத்தது. அதில், தீபாவளி கொண்டாட்டம் பற்றிய அறிவிப்பு இருந்தது. அதில், 132.70 லட்சம் என்று இருந்தது தெரிந்தது.
information.up.nic.in | Archived Link |
டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் முதலில் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் தகவல் பரவிவந்துள்ளது தெரிகிறது. இருப்பினும் தவறு சுட்டிக்காட்டப்பட்டு ஊடகங்கள் அதைத் திருத்திக்கொண்டன. ஆனாலும் தொடர்ந்து தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருவது தெரிகிறது.
நம்முடைய ஆய்வில்,
டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் 1.327 கோடி ரூபாய் என்று குறிப்பிடுவதற்கு பதில் தவறுதலாக 133 கோடி ரூபாய் செலவில் தீபாவளி கொண்டாட்டம் என்று செய்தி வெளியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உ.பி அரசு ரூ.1.327 கோடி செலவில் தீபாவளி கொண்டாட உள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவறு தெரிந்ததும் ஊடகங்கள் அந்த செய்தியை அகற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊடகங்கள் தவற்றைத் திருத்தி பல செய்திகள் வெளியிட்ட பிறகும் தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ரூ.133 கோடி செலவில் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு தீபாவளி கொண்டாடியது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ரூ.133 கோடியில் தீபாவளி கொண்டாடிய யோகி அரசு: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
