
‘’இனி மருத்துவ படிப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Archived Link
Manickam Bhoudhan என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் உத்தரப் பிரதேச அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அதன் மேலே, காம கொடூரனின் காட்டுமிராண்டி காட்டு தர்பார் பாரீர் … இந்த கொடுமைக்கு விடிவே இல்லையா?, என்று எழுதியுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேலோட்டமாகப் பார்க்கும்போதே, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சித்தரிக்கப்பட்ட பதிவு என தெரிகிறது. இதனை எழுதிய நபர், மிக கீழ்த்தரமாக யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார்.
இதன்பேரில், கூகுளில் ஆதாரம் தேடிப் பார்த்தோம். அப்போது, சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன. அதாவது, 2017ம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக பதவி ஏற்றது முதலாக, இந்த வதந்தி பரவி வருவதாக, தெரியவந்தது.

இதன்படி, யோகி ஆதித்யநாத் அரசு உத்தரப் பிரதேசத்தில், இந்த வதந்தியில் கூறப்பட்டுள்ளது போல எந்த நடவடிக்கையையும் அமல்படுத்தவில்லை என்றும், நீட் விதிமுறைகளை பின்பற்றியே உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது என்றும் உறுதியாகிறது.

இதுதொடர்பாக, ஏற்கனவே டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும். இதுபற்றி உத்தரப் பிரதேச மாநில அரசு போதுமான விளக்கம் ஏற்கனவே அளித்துள்ளது.
பல்வேறு தரப்பிலும் பகிரப்படும் வதந்தியை உண்மை என நம்பி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது, தெளிவாகிறது. எனவே, உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:மருத்துவ படிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு இல்லை என உத்தரப் பிரதேச அரசு அறிவிப்பு: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
