
நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று ஊடகங்கள் போட்டிப் போட்டு வதந்தி பரப்பின. இந்த தகவல் தவறானது என்று தெரிந்ததும் ஊடகங்கள் அந்த செய்தியை அகற்றிவிட்டன. ஆனால், நெட்டிசன்கள் அந்த நியூஸ் கார்டுகளை தொடர்ந்து பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்று ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. Ramana Prakash என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை 2023 மே 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இது போன்ற நியூஸ் கார்டு, அஞ்சலி போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர் நடிகர் சரத்பாபு. இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாட்ஸ்அப்-ல் அவர் இறந்துவிட்டார் என்று வதந்தி பரவவே, முன்னணி ஊடகங்கள் கூட அந்த தகவலை சரிபார்க்காமல் செய்தியாக வெளியிட்டுவிட்டன.
இந்த தகவல் தவறானது என்று சரத்பாபு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்திருந்தனர். மேலும், சரத்பாபு உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் அவரது சகோதரி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஊடகங்கள் தவறான செய்தியை அகற்றிவிட்டன. ஆனால், வதந்தி தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
சன் டிவி, தந்தி டிவி, ஜெயா பிளஸ், கேப்டன் என செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் பயன்படுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். செய்தி தவறானது என்று ஊடகங்கள் அகற்றிவிட்டாலும் வதந்தி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
சரத்குமார் நலமுடன் உள்ளார் என்று அவரது சகோதரி தெரிவித்த செய்தி மற்றும் வேறு ஆதாரங்களைத் தேடி எடுத்தோம். தெலுங்கு திரைப்பட உலக மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த வம்சி என்பவர் வெளியிட்டிருந்த ட்வீட் கிடைத்தது. அதில், சரத் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சரத்பாபுவின் சகோதரி வெளியிட்ட செய்தியில், “நடிகர் சரத்பாபு மரணமடைந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார். அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூகவலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார் என செய்திகள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: dailythanthi.com I Archive
நடிகர் சரத்பாபு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது உண்மை. அதற்குள்ளாக அவர் மரணமடைந்துவிட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று ஊடகங்கள் பரப்பிய வதந்தியை உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று வதந்தி பரப்பிய ஊடகங்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
