FACT CHECK: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ் காலில் பிரதமர் மோடி விழுந்தாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உயரம் குறைவான பெண்மணி ஒருவரின் பாதங்களை பிரதமர் மோடி தொடுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் காலில் விழுந்ததன் பின்னணி

இதுதாண்டா_RSS இதுதாண்டா_சஙகி. காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்ததன் பின்னணியில் தலைமைக் கட்டிடக் மேற்பார்வை அதிகாரியாக யோகி அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றியவர் ஆரத்தி டோக்ரா, ஐஏஎஸ் அதிகாரி.  அவர் மிகவும் குட்டையானவர் (மூன்று அடி மற்றும் 6 அங்குலம்) ஆனால் தன் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் 56வது ரேங்க் பெற்று IAS ஆனவர்..  அவர் ஒரு ராணுவ அதிகாரியின் மகள். இந்த மகத்தான மறக்க முடியாத சாதனையை நிறைவேற்றியதற்காக அவரது மகத்தான சேவைகளைப் பாராட்டி அவரது காலில் விழுந்து வணங்கும் இந்தியப் பிரதமர் மோடி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பதிவை Yuvarraj Madhavan என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆர்த்தி டோக்ரா ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருபவர். அவர் எப்படி உத்தரப்பிரதேச மாநில அரசுப் பணிக்கு மாறுவார் என்ற கேள்வி எழுந்தது. ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரி என்றால் ராஜஸ்தான் மாநிலப் பணியைப் பார்ப்பார். அங்கிருந்து மத்திய அரசுப் பணிக்கு செல்வார். வேறு ஒரு மாநில அரசுப் பணிக்கு மாறுதல் செய்வது இல்லை. எனவே, ஃபேஸ்புக் பதிவு உண்மைதானா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது படத்தில் இருப்பது ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த பெண்மணி காசி விஸ்வநாதர் கோவிலை புதுப்பித்த குழுவின் கட்டிட மேற்பார்வை அதிகாரியும் இல்லை என்பது தெரியவந்தது. 

அசல் பதிவைக் காண: zeenews.india.com I Archive

zeenews வெளியிட்டிருந்த செய்தியில் அந்த பெண்மணி பிரதமர் மோடியை சந்திக்க வந்தவர் என்றும், பிரதமர் மோடி அந்த பெண்மணியிடம் உடல் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி, அந்த பெண்மணியை தடுத்து நிறுத்தியதாகவும், அந்த பெண்மணியின் காலைத் தொட்டு வணங்கினார். அந்த பெண்மணியின் பெயர் ஷிகா என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு செய்திகள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அந்த பெண் இந்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும் நமக்கு கிடைத்தது. 

இதன் மூலம் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா காலை பிரதமர் மோடி தொட்டு வணங்கினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காசி விஸ்வநாதர் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு தலைமை ஏற்ற ஐஏஎஸ் அதிகாரியின் காலில் பிரதமர் மோடி விழுந்தார் என்று பகிரப்படும் தகவல் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ் காலில் பிரதமர் மோடி விழுந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False