
ரஜினிகாந்த் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தர்காவுக்கு சென்றது மிகப்பெரிய தவறு, இதற்காக இந்துக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தர்கா சென்று வழிபாடு செய்த புகைப்படம் மற்றும் அர்ஜூன் சம்பத் படத்தை ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காவியை அவமதிக்காதீர்கள் ரஜினி… தர்காவுக்கு பச்சை துண்டு அணிந்து செல்லாமல், காவி துண்டு அணிந்து சென்றது காவியை அவமதிக்கும் செயல். ரஜினிகாந்த், ரகுமானுடன் தர்காவுக்கு சென்றது மிகப்பெரிய தவறு. அதற்காக இந்துக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்” என்று குறிப்பிடப்பட்டிருந்து.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இந்த நியூஸ் கார்டை S.Saravanan என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 16ம் தேதி பதிவிட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் Sivadoss Subbiah என்ற ஐடி கொண்டவர் இந்த நியூஸ் கார்டை 2022 டிசம்பர் 16ம் தேதி பதிவிட்டுள்ளார்.
உண்மை அறிவோம்:
நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காவுக்கு சென்று வழிபாடு செய்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து ரஜினிகாந்த் அங்கு சென்றிருந்தார். இந்தி திரைப்படம் ஒன்றில் நடிகை ஒருவர் காவி நிறத்தில் கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஜினிகாந்த் காவி நிற துண்டு அணிந்து தர்காவுக்கு சென்றதன் மூலம் காவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்பது போல இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
அர்ஜூன் சம்பத் பலவற்றைப் பேசுபவர். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், பாஜக-வுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறுபவர். அவர் ரஜினிக்கு எதிராகக் கருத்து கூற வாய்ப்பு இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டு போலியானது போல இருந்து. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் ரஜினிகாந்த் தர்காவுக்கு சென்றதை விமர்சித்து அர்ஜூன் சம்பத் கருத்து கூறியுள்ளாரா என்று பார்த்தோம். ஆனால் அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் தர்கா பயணம் தொடர்பாக எந்த பதிவும் இல்லை.

அடுத்ததாக கதிர் நியூஸ் டிசம்பர் 16, 2022 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதிலும் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, அந்த ஊடகத்தின் நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஜினிகாந்த் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்துக்களிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
