மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கடிகார நேரம் 4:20 என்று இருந்ததா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிரதமர் மோடி ரயில் நிலையத்திற்குச் சென்ற போது, ரயில் நிலைய டிஜிட்டல் கடிகாரத்தில் 4:20 என்று இருந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் 4:20 என்று காட்டப்பட்டது போன்று இருந்தது. “கண்ணில் பட்டது” என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை ஆரிப் ராஜா வீடியோஸ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 18ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 420 ஏமாற்றுதல், மோசடி செய்தல் தொடர்பான குற்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிரதமர் மோடியை மோசடியானவர் என்று ரயில் நிலைய கடிகாரமே கூறிவிட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு பிரதமர் மோடி வாரணாசி சென்ற போது வாரணாசி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது எடுக்கப்பட்ட படத்தை எடிட் செய்து தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.

கூகுளில் பிரதமர் மோடி வாரணாசி ரயில் நிலையம் என்று டைப் செய்து தேடிய போது, 2021ல் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. தி இந்து ஆங்கில ஊடகத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவின் உண்மை புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில் நேரம் 01:13 என்று இருந்தது. மேலும், இந்த புகைப்படத்தைப் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

Archive

அதன் அடிப்படையில் பிரதமர் மோடியின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தேடி எடுத்தோம். அதில், “அடுத்த நிறுத்தம் பனாரஸ் (வாரணாசி). ரயில் இணைப்புகளை மேம்படுத்தவும், சுத்தமான, நவீன மற்றும் பயணிகளுக்கு ஏற்ற ரயில் நிலையங்களை உருவாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். 2021ல் பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படத்தை எடிட் செய்து பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுபற்றிய வீடியோ ஆதாரம் ஒன்றும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

முடிவு:

பிரதமர் மோடி வாரணாசி ரயில் நிலையத்திற்கு சென்ற போது அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் 420 என்று நேரம் காட்டியதாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கடிகார நேரம் 4:20 என்று இருந்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered