பீகாரில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தேசிய அளவில் I National

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகல் காந்தி நடத்தும் வாக்காளர் அதிகார நடைப்பயணம் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மிகப்பெரிய கூட்டத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பீகாரில் நடத்தும் “வாக்காளர் அதிகார நடைபயணம்” மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரும்! – லாலு பிரசாத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மற்றொரு பதிவில், “இந்த கூட்டத்தை பார்த்து மோடிக்கு வியர்த்து இருக்குமோ இல்லையோ மோடிக்காக திருட்டு வேலை பார்த்த  தலைமைத் தேர்தல் அதிகாரி தியானேஷ் குமாருக்கு வியர்த்து இருக்கும்..🤣😂

#வாக்காளர்_உரிமை_யாத்திரை #பீகார் #வாக்குதிருட்டுஆணையம் #ராகுல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கானோரை நீக்கியதை வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி போராட்டம், சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தியின் பயணத்திற்கு மிகப்பெரிய அளவில் மக்களின் ஆதரவு உள்ளது என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் ராகுல் காந்தியை காணவில்லை. அவர் நடைபயணம் மேற்கொள்ளும் காட்சி இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக சந்தேகம் எழவே, ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கிய ஆகஸ்ட் 17ம் தேதிக்குப் பிறகு ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இந்த வீடியோ சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததைக் கண்டறிந்தோம்.

யாத்திரை 2025 ஆகஸ்டு 17ல் தொடங்கியது. ஆனால், 2025ம் ஆண்டு ஜூன் இறுதியில் இந்த வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அதில் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ ராகுல் காந்தியின் யாத்திரையின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

2025 ஜூன் மாதம் 28ம் தேதி இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. மராத்தியிலிருந்த அந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “பெட்கான் ஹிந்துகேசரி மைதானம், லட்சக்கணக்கான இதயங்கள்” என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. பெட்கான் ஹிந்துகேசரி மைதானம் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்படி ஒரு இடம் மகாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து தேடிய போது சில பதிவுகளில் காளை பந்தயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சில அடிப்படை கீ வார்த்தைகளைக் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது ஜூன் மாதம் பெட்கான் ஹிந்துகேசரி மைதானத்தில் காளை பந்தயம் நடந்ததாக செய்தியுடன் கூடிய வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன. 

கூகுள் மேப்-ல் பெட்கான் ஹிந்துகேசாி மைதானம் என்று தேடியபோது அந்த இடத்தின் ஸ்ட்ரீட் வியூ நமக்கு கிடைத்தது. அதில் சிலர் வெளியிட்டிருந்த புகைப்படங்களையும் காண முடிந்தது. அந்த புகைப்படமும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் கூடியிருந்த கூட்டத்தின் காட்சியும் ஒன்று போல இருப்பதைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த வீடியோ பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள யாத்திரையின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

முடிவு:

பீகாரில் மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டதாக பரவும் வீடியோ கடந்த 2025 ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஒரு கால்நடை பந்தையத்தின்போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பீகாரில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு வந்த கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply