
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் தவெக-வில் இணைந்த அருண்ராஜ் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வருமானவரித்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சமீபத்தில் தவெக-வில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் பேட்டி ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இப்போ மாநில அளவில் பிரசிடென்சியல் சிஸ்டம் கொண்டு வந்தா… இங்க எம்.எல்.ஏ தேர்தல் தனியாக நடக்கும், சி.எம் தேர்தல் தனியாக நடக்கும். சி.எம்-க்கு தனியாக மக்கள் ஓட்டு போடுவார்கள். உதாரணத்துக்கு தவெக தலைவர் வேண்டுமா… இல்ல ஸ்டாலின் வேண்டுமா? அப்படின்னு அதுக்கு மட்டும்தான் எலெக்ஷன் நடக்கும்” என்கிறார்.
நிலைத் தகவலில், “விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும்….!”_ விஜய் கட்சியில் சேர்ந்த அருண்ராஜ் அதிரடிப் பேட்டி…
😄😅🤣(இதை கேட்டு அதிபர் சைமன் அதிர்ச்சி 😳 எங்கிருந்து இந்த முட்டா பீசு எல்லாம் வருகிறானுங்களோ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமெரிக்காவில் அதிபரை மக்களே தேர்ந்தெடுப்பது போன்று தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படும் என்று தவெக-வில் சமீபத்தில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்த அருண் ராஜ் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் பதிவிட்டு வரும் வீடியோவில் விஜய் ஆட்சிக்கு வந்தால் என்று அவர் எங்கும் கூறவில்லை. எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை விகடன் ஊடகம் வெளியிட்டுள்ளது. எனவே, அந்த வீடியோவை பார்த்தோம். 43 நிமிட வீடியோவில் 31வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி வந்தது. மாநில சுயாட்சி வேண்டும் என்று கூறுகின்றீர்கள் ஆனால் மாநிலத்திற்கு மட்டும் அதிபர் முறை வேண்டும் என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். இது எப்படி சரியாகும் என்று நிருபர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு அருண் ராஜ், மாநிலத்தில் மட்டும் அதிபர் முறை என்பது மாநில சுயாட்சிக்கு வழிவகுக்கும். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு இந்தியா நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். வேறுபட்ட மக்கள் கொண்ட நாட்டில் ஒரே ஒரு தலைவரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பீகாரோ, ஜார்கண்டோ அல்லது தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவரை எல்லா மாநிலங்களைச் சார்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் மாநிலத்தில் அந்த பலதரப்பட்ட மக்கள் என்பது சற்று மேனேஜ் செய்யும் அளவுக்குத்தான் உள்ளது. வேறுபாடே இல்லை என்று கூறமாட்டேன், ஆனால் ஓரளவுக்கு நிர்வகிக்கும் அளவுக்கு உள்ளது.
இப்போது நடக்கும் தேர்தல் என்பது யாரும் எம்.எல்.ஏ-க்களை பார்ப்பது இல்லை. கட்சியைப் பார்த்து வாக்களிக்கின்றனர். இந்த தடவை அதிமுக ஆட்சி வேண்டாம் என்றால் தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாம். தி.மு.க நிற்கவில்லை என்றால் தி.மு.க கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிற மனநிலைதான் உள்ளது. இந்த நிலை மாறினால், அரசியல் நிலை நன்றாக இருக்கலாம் என்று நான் என்னுடைய ஆலோசனையை சொல்கிறேன்.
இதை நான் 2011ம் ஆண்டிலேயே எழுதினேன். இது ஒரு பரிசோதனை திட்டம் தான். அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள் இது பற்றி விவாதிக்கலாம்” என்று கூறுகிறார்.
பேட்டியில் எந்த இடத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் முதலமைச்சரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையைக் கொண்டு வருவோம் என்று அவர் கூறவில்லை. அரசியலமைப்பில் மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயக முறையிலும் மாநில அரசுகள் முதலமைச்சரை பொது மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறைக்கும் மாற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று மட்டுமே அருண் ராஜ் கூறுகிறார்.
உண்மைப் பதிவைக் காண: blogspot I Archive
2011ம் ஆண்டில் இதை நான் எழுதினேன் என்று அவர் பேட்டியில் கூறியிருந்தார். அவருடைய பிளாக் பக்கத்தில் 2011ம் ஆண்டு அவர் எழுதிய பதிவைத் தேடி எடுத்தோம். அதில் அவர் முதலமைச்சரை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல முதலமைச்சர் யார் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ-க்களுக்கு தனியாகவும் முதலமைச்சர் வேட்பாளருக்குத் தனியாகவும் மக்கள் வாக்களிக்கும் முறை வேண்டும். ஒருவர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதன் மூலம் குதிரை பேரத்தை தடுக்கலாம். குறிப்பிட்ட துறையில் நிபுணர்களாக உள்ளவர்கள் தேர்தலைச் சந்திக்காமலேயே அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் தன்னுடைய எழுதியிருந்தார்.
ஒருவரின் தனிப்பட்ட கருத்தை, அரசியல் கட்சியின் கொள்கை போலத் தவறாகப் பகிர்ந்துள்ளனர். அருண் ராஜ் அளித்த பேட்டியை முழுமையாக வெளியிட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. தங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மாநில அளவில் அதிபர் முறை வேண்டும் என்பது தன் தனிப்பட்ட விருப்பம் என்று தவெக நிர்வாகி அருண் ராஜ் அளித்த பேட்டியை எடிட் செய்து தவறான அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:விஜய் ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் அதிபர் முறை கொண்டு வரப்படும் என்று அருண் ராஜ் கூறினாரா?
Written By: Chendur PandianResult: Misleading
