FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி மு.க. ஸ்டாலின் கூறியதாக நியூஸ்18 தமிழ் பெயரில் பரவும் வதந்தி!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

மயிலாப்பூரில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் மயிலாப்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு” என்று இருந்தது.

நிலைத் தகவலில், “வன்மத்தின் உச்சம் திமுக ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Gowtham Cloudsnine என்பவர் 2021 ஏப்ரல் 2 அன்று பதிவிட்டிருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அ.தி.மு.க அரசு கொண்டுவந்தது. அதில் தெளிவாக இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதங்களுக்குப் பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். துணை முதல்வர் உள்ளிட்டவர்களும் தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகின்றனர். இது தொடர்பான அரசியலுக்குள் நாம் செல்லவில்லை.

அசல் பதிவைக் காண: hindutamil.in I Archive 1 I puthiyathalaimurai.com I Archive 2

இந்த நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் தொடங்கி, பொன்முடி, எ.வ.வேலு என முன்னணி நிர்வாகிகள் கூறியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. அது பற்றி அவ்வப்போது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஃபேக்ட் செக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். 

தற்போது சென்னை மயிலாப்பூரில் நடந்த திமுக பிரசார கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறியதாக மீண்டும் ஒரு நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். முதலில் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம்.

அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது, சமீப காலமாக பிரேக்கிங், ஜஸ்ட் இன் போன்ற நியூஸ் கார்டுகளை அது வெளியிடுவது இல்லை என்றும், அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்புப் பேட்டி தொடர்பான அறிவிப்புகளை மட்டும் போட்டோ கார்டாக அவர்கள் வெளியிட்டு வருவதும் தெரிந்தது. கடைசியாக கடந்த மார்ச் 9ம் தேதி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தேமுதிக அறிவித்ததை நியூஸ் கார்டாக வெளியிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது. அதன் தமிழ் ஃபாண்ட், டிசைன் போன்றவை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இதை உறுதி செய்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இதை நாங்கள் வெளியிடவில்லை என்றார்.

மயிலாப்பூர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார் என்று தேடினோம். அப்போது தினமலர் வெளியிட்ட பிரசார வீடியோ நமக்கு கிடைத்தது. அதை கேட்டோம். மு.க.ஸ்டாலின் வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி ஸ்டாலின் எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், மு.க.ஸ்டாலின் அப்படி கூறியிருந்தால் தினமலரில் தலைப்பிட்டு செய்தியாக்கி இருப்பார்கள். தினகரனில் ஸ்டாலின் பேச்சு வெளியாகி இருந்தது. வன்னியர் தொடர்பாக ஸ்டாலின் பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

அசல் பதிவைக் காண: dinakaran.com I Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மயிலாப்பூரில் மு.க.ஸ்டாலின் கூறினார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று மயிலாப்பூர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.