
‘’பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதும், வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

நவம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ரயிலில் பலர் கூட்டமாகச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பீகார் தேர்தலில் பிஜேபிக்கு வாக்கு செலுத்திய பின் பிழைப்பதற்கு தமிழகம் கிளம்பிய பீகாரிகள். அதான் இளிச்சவாயன் மாநிலம் தமிழ்நாடு இருக்கே,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன், பலர் மிக சீரியஸாக இதற்கு கமெண்ட் பகிர்வதையும் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. இதையொட்டி பலரும் சமூக ஊடகங்களில் பாஜகவையும், பீகார் மக்களையும் விமர்சித்து வருகின்றனர்.

இதையொட்டியே, மேற்கண்ட புகைப்பட பதிவும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், இந்த புகைப்படம் தற்போதைய நிகழ்வுடன் தொடர்புடையதல்ல.
இது கடந்த 2016ம் ஆண்டு முதலே இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை நாம் கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இதுதொடர்பான செய்தி விவரங்கள் கிடைத்தன.

எனவே, 2016ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தை எடுத்து, தமிழகத்திற்கு வேலை தேடி வரும் பீகாரிகள் என்று வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட பின் வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்- உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
