
மேற்கு வங்கத்தில் சூடுசொரணை வந்து களம் இறங்கிய காவி படை என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மக்களை தாக்கும் காலிகள் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மேற்க்கு வங்கத்தில் சூடுசொரனை வந்து களம் இறங்கிய காவி படை ⛳ இனி தொடரும்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Selva Sri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 மே 6ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதுமே கம்யூனிஸ்ட், பா.ஜ.க தொண்டர்கள் மீது திரிணாமுள் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது பதிலடி தாக்குதலைத் தொடங்கிவிட்டோம் என்று படங்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
வன்முறை யார் செய்தாலும் தவறுதான். மம்தா பானர்ஜி கட்சியினர் செய்தார்கள் என்பதற்காக அவர்களை யாரும் கொண்டாடவில்லை, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சூழலில் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள காவி படை என்று பகிரப்படும் படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. 2018ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நடந்த வன்முறைச் சம்பவம் என்று நமக்குச் செய்திகள் கிடைத்தன.
2018ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் என அனைவரும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், வாக்குச் சாவடியை கைப்பற்றுவது, எதிர்க்கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது என்று வன்முறையில் ஈடுபட்டதாக செய்தி கிடைத்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கையில் பாரதிய ஜனதா கட்சிக் கொடியுடன் சிலர் வரும் புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா நடத்திய பேரணிக்கு சென்றவர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதை எதிர்த்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: indianexpress.com I Archive
இதன் மூலம் இந்த புகைப்படங்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திரிணாமுள் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் நடத்துவதை எதிர்த்து பா.ஜ.க-வினர் பதில் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் இவை இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கு வங்கத்தில் வன்முறையில் ஈடுபட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பதிலடி தாக்குதல் நடத்தும் பா.ஜ.க என்று பரவும் படங்கள் மிகக் பழமையானவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன?
Fact Check By: Chendur PandianResult: Missing Context

Indeed I don’t know it is fakenews, I humbly requesting you to pardon me for sharing the above without knowing it’s genuinity.I would be grateful to you if you could help me how to verify a news whether it is true or fake.
Thankyou EaswaranKrithivasan