திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி ஒன்றின் மாணவர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பள்ளி மாணவர்கள் பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பள்ளிக் கூடம், கல்லூரி என்றால் மாணவர்கள் குழு மோதலில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆட்சி, அந்த ஆட்சி என்று இல்லை, எந்த ஆட்சி வந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மோதலை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதே உண்மை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பள்ளி மாணவர்கள் கஞ்சா அடித்து போதையில் மோதிக் கொண்டனர் என்று பலரும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் என்றும் குறிப்பிட்டவர்கள் எந்த ஊர் என்பதை குறிப்பிடவில்லை. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: thanthitv.com I Archive 1 I updatenews360.com I Archive 2

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2024 செப்டம்பரிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இவற்றுக்கு இடையே தந்தி டிவி-யில் வெளியான செய்தியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது.

அதில், “ரவுடிகளை போல பள்ளி மாணவர்கள் -கொலை வெறி தாக்குதல்- ஊரே நின்று வேடிக்கை பார்த்த காட்சி” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. செய்தியை பார்த்த போது, புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் கடுமையாகத் தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக்கொண்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை என்று புதுச்சேரி போலீசார் கூறினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

இதன் அடிப்படையில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை, என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் நடந்தது என்பது தெளிவாகிறது.

பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்ட வீடியோவை எடுத்து, ஸ்டாலின் ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்ட காட்சி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோவை தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் கீழ் மாணவர்கள் கஞ்சா போதையில் மோதிக்கொள்ளும் நிலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:திமுக ஆட்சியில் செங்கல்பட்டு பள்ளி மாணவர்கள் கஞ்சா போதையில் மோதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False