மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று விஜய் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

சென்னை மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகரும் தவெக தலைவருமான விஜய் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில். “மெரீனாவில் இடமிருக்கே? விமான நிலையம் கட்ட பரந்தூரேதான் வேணுமா? பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் கட்டலாமே? எங்கே என்ன விவசாயமா நடக்கிறது? மக்களுக்கும் போய்வர வசதியாக இருக்குமே? – தவெக தலைவர் விஜய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “ஆஹா, இப்படி ஒரு அறிவாளிதான் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கணும்விமான நிலையம் அமைப்பது மத்திய அரசு என்பது கூட தெரியாத சினிமா நடிகர் 😂😃😁

விமான நிலையம் , இரயில் நிலையம் , அணுமின் நிலையம் , ராணுவ தளங்கள் , கப்பல் துறைமுகம் இதுலாம் மாநில அரசால் அமைக்க முடியாது என்பதை யாராவது இந்த சினிமா நடிகரிடம் சொல்லுங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பதில் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கலாம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், விஜய் அப்படி பேசியதாக எந்த செய்தியும் இல்லை. விஜய் பேசியதை எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருந்தன. அதை முழுவதுமாக கேட்ட போது அவர் அப்படி கூறவில்லை என்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டும் உண்மையானது போல தெரியவில்லை. அதன் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்பது தெளிவானது. இதை உறுதிசெய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போல ஒரு நியூஸ் கார்டு இருந்தது. ஆனால் அதில், “பேச்சுக்கே இடமில்லை. தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜகவிற்கு எதிரானதாகத்தான் எப்போதும் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – தவெக தலைவர் விஜய்” இருந்தது. இந்த நியூஸ் கார்டை திருத்தி, தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது.

புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரும் நமக்கு இப்படி ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவும் போலியான நியூஸ் கார்டை “FAKE” என்று முத்திரைகுத்தி இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு அனுப்பினார். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட “மெரீனாவில் இடமிருக்கே” என்று பரவும் நடிகர் விஜய் தொடர்பான நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

முடிவு:

பரந்தூருக்கு பதில் மெரினாவில் விமான நிலையம் கட்டலாம் என்று தவெக தலைவர் விஜய் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:மெரினா கடற்கரையில் விமானநிலையம் கட்டலாம் என்று விஜய் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply