
வங்கதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவரை தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளம் பெண் ஒருவர் கை கட்டப்பட்டு, வாயில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் இந்திய இந்துப் பெண்ணுக்கு கைகளில் மலர் விலங்கு..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் உள்நாட்டுக் கலவரம் வெடித்து, அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பியோடி வந்தார். அதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் இந்து கோவில்கள் எரிக்கப்படுவதாகவும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள இந்துக்கள் சாதி ரீதியாக போராட, வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்திய இந்து பெண்ணை தாக்கியதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அந்த பெண் முகத்தில் எந்த பயமும், எதிர்ப்பும் இல்லை. வீடியோவுக்கு போஸ் கொடுத்தபடி உள்ளார். அருகில் உள்ளவர்களும் இங்கு என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லாமல் இருப்பதையும் சிலர் மொபைல் போனில் வீடியோவை எடுப்பதையும் எல்லாம் பார்க்கும் போது இது உண்மையா அல்லது ஸ்கிரிப்டட் வீடியோவா என்ற சந்தேகம் எழுந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வருவதற்கு முன்பு இருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. வங்கதேச பல்கலைக் கழக மாணவிகள் தற்கொலை தொடர்பாக 2024 மார்ச் மாதம் நடந்த போராட்டத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற பெண்ணை காண முடிந்தது. அந்த வீடியோவின் தொடக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணும் வாயில் ஸ்டிக்கர் ஒட்டியடி நிற்கிறார். வீடியோவில் வீதி நாடக காட்சி சிறிது காட்டப்படுகிறத.
அப்போது, 1.18வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பெண் வருகிறார். அதே பச்சை நிற ஆடை உடுத்தியுள்ளார். மற்றொரு வீடியோவில் வீதி நாடக காட்சி காட்டப்படுகிறது. ஆனால் தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு மாணவர்களின் அடையாளம் தெரியாத வகையில் அது எடிட் செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் வேறு வேறு அடிப்படை வார்த்தைகளை வங்க மொழிக்கு மொழிபெயர்த்துத் தேடினோம். அப்போது thenews24.com என்ற இணையதளத்தில் இந்த பெண்ணின் புகைப்படத்துடன் வெளியான செய்தி நமக்கு கிடைத்து. அதை மொழி பெயர்த்துப் பார்த்தோம். இந்த பெண் பிசிஎல் என்ற அமைப்பின் தலைவர் என்பதால் தாக்கப்பட்டார் என்று வங்கதேசத்தில் வதந்தி பரவியதாகவும் அது தொடர்பாக அந்த செய்தி வெளியாகி இருப்பதும் தெரிந்தது. அதில் அந்த பெண்ணின் பேட்டியையும் வெளியிட்டிருந்தனர்.
இந்த மாணவியின் பெயர் திரிஷானா என்று குறிப்பிட்டிருந்தனர். இசைத் துறை மாணவியாம். அவர் அந்த பேட்டியில், “பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி பேரணியின் போது நடத்தப்பட்ட வீதி நாடகத்தின் காட்சி அது. அந்த வீடியோவை யாரோ தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுவிட்டனர். இதைப் பார்த்து என் உறவினர்கள் எல்லாம் என்னைத் தொடர்புகொண்டு விசாரித்து வருகின்றனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: thenews24.com I Archive
தொடர்ந்து நம்முடைய தேடுதலில் வங்கதேசத்தில் உள்ள ஜெகநாத் பல்கலைக் கழக மாணவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. வங்கமொழியில் பதிவிடப்பட்டிருந்ததை மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில், “உங்கள் வதந்திகளால் இந்த பெண் இன்று மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இவர் 2021-22ம் கல்வியாண்டில் ஜெகநாத் பல்கலைக்கழகத்தின் மாணவி. சில நாட்களுக்கு முன் அவந்திகா தற்கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போடப்பட்ட வீதி நாடகத்தின் காட்சி தான் இந்த வீடியோ! ஆனால் சிலர் அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்,
உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்த பெண்ணை தற்போதைய போராட்டத்துடன் இணைத்துப் பதிவிட்டிருப்பதால் இது உடனடியாக வைரலானது. இதைப் பார்த்த அந்த மாணவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இன்று அவந்திகா போல் இந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அனைவரும் அந்த பெண்ணின் பக்கம் நிற்கிறார்கள், இந்த வீடியோவை நீங்கள் எங்கு பார்த்தாலும், கருத்துகளில் எதிர்ப்பை தெரிவிக்கவும். முடிந்தவரை இந்த பதிவை ஷேர் செய்து இந்த வதந்தியை நிறுத்துங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ வீதி நாடகத்தின் ஒரு காட்சி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்த பெண்ணை தாக்கியதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய வீதி நாடகத்தின் காட்சியை எடுத்து இந்திய இந்து பெண்கள் வங்க தேசத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:இந்தியாவை சேர்ந்த இந்து பெண் வங்கதேசத்தில் தாக்கப்பட்டாரா?
Written By: Chendur PandianResult: False
