
தி.மு.க ஆட்சியில் நேர்மையாக தொழில் செய்து வரும் சிறு உணவு வியாபாரியை போலீசார் தொந்தரவு செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையோரத்தில் உணவுப் பொருட்கள் கொட்டிக்கிடக்க, ஒரு பெண்மணி போலீசாருடன் சண்டையிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் “சிறு வியாபாரிகளை வாழவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையான ஆடியோ நீக்கப்பட்டு, தமிழ் திரைப்பட பாடல் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “#காவல் துறைக்கு #மாமுல் இல்லையா… சிறு கடைகள் இருக்காது… அதிகாரிகள் எவ்வளவு #கொள்ளை அடித்து கொள்ளுங்கள்… #ஸ்டாலின் எதை சொன்னாலும் கேட்க வேண்டும் .. #போதைப்பொருள் விற்று பிழைத்து கொள்ளலாம்… #நேர்மையாக வாழ கூடாது… #ஸ்டாலின் கட்டளை..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாலையோர உணவு கடையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அகற்றியதாக ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடைபாதை என்பது பொது மக்கள் நடப்பதற்குத்தானே தவிர வியாபாரம் செய்வதற்கு இல்லை. நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றியது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்ததா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.
வீடியோ தெளிவாக இல்லை. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. ஆடியோ நீக்கப்பட்டிருந்தது. உண்மையான ஆடியோ இருந்திருந்தால் அந்த பெண்மணி என்ற சொல்கிறார் என்பது தெரிந்திருக்கும். எனவே, இந்த வீடியோ பற்றி அறிய வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2024ம் ஆண்டில் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
தெலுங்கு மொழியிலிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது “மதுக்கடைகள் ஏற்படுத்தாத போக்குவரத்து நெரிசலையா இந்த சாலையோர உணவுக் கடைகள் ஏற்படுத்திவிட்டன” என்று குறிப்பிட்டு தெலங்கானா முதலமைச்சரை டேக் செய்திருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவில் உண்மையான ஆடியோ இருந்தது. அதில் அந்த பெண்மணி தெலுங்கு மொழியில் சண்டை போடுவதை கேட்க முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை தெலங்கானாவைச் சார்ந்தது என்பது தெரியவந்தது.
நமக்குக் கிடைத்த எக்ஸ் தள பதிவின் கமெண்ட் பகுதியில் இந்த பெண்மணியை “குமாரி அக்கா கடை” என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் கூகுளில் “ஹைதராபாத், குமாரி அக்கா கடை அகற்றம்” என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 2024 ஜனவரியில் ஹைதராபாத் ஐடி- பூங்கா பகுதியில் சாலையோர கடை நடத்தி வந்த குமாரி என்பவரின் கடை அகற்றப்பட்டதாக செய்திகள் நமக்குக் கிடைத்தன.

இதன் அடிப்படையில் கூகுள் மேப்-ல் அந்த கடை இருந்த பகுதியை தேடினோம். அப்போது, “Kohenur Rd, Hyderabad, Telangana” என்ற பகுதியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற கட்டிடங்களைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது என்பது உறுதியானது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஹைதராபாத்தில் சாலையோர கடையை போலீஸ் அகற்றிய வீடியோவை மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு போலீசார் அகற்றியதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“மாமூல் கொடுக்காததால் சாலையோர கடையை காலி செய்த ஸ்டாலின் போலீஸ்” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
