
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயர் ஆணை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!!! கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 60வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கும் ஆணையை பசும்பொன்னில் வெளியிடுகிறார் பிரதமர் மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Gowtham Gowthu என்ற ஃபேஸ்புக் முடி கொண்டவர் 2022 அக்டோபர் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மதுரை மீனாட்சியம்மன் பெயரை கூட்ட வேண்டும் என்று வேறு ஒரு தரப்பினர் வலியுறுத்த ஆரம்பித்தனர். அப்படி இருக்கும் போது, மதுரை விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை பிரதமர் வைக்க உள்ளார் என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. அந்த விமான நிலையத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை பிரதமர் மோடி வைக்கவும் செய்யலாம். யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையை யாராலும் உறுதி செய்ய முடியாது. அதே நேரத்தில், இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா இல்லையா என்று ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானது என்பது தெரிந்தது.

இதை உறுதி செய்ய தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அப்போது இந்த நியூஸ் கார்டு நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று “FAKE” முத்திரையுடன் தந்தி டிவி பதிவு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
இதன் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை பிரதமர் சூட்ட உள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை பிரதமர் மோடி சூட்டுகிறார் என்று பரவும் தந்தி டிவி நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுகிறார் மோடி என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
