கோயில் சிலை உடைப்பு, பணம் வசூலில் அண்ணாமலைக்கும் தொடர்பு என்று யூடியுபர் கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கோவில் சிலைகளை மிஷனரிகள் உடைத்ததாக வதந்தி பரப்பி பணம் வசூலித்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய கோயில். மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக பொய்களை பரப்பி 33 லட்ச ரூபாய் பணத்தை வசூல் செய்து திருடிய பாஜக வை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத். அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பாதி பணத்தை மத்திய மந்திரிகளை திருப்திபடுத்த செலவு செய்ததாகவும் போதையில் உளறல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை PM Suresh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 மே 30ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்  சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இதன் உப கோயில்களின் பழுதடைந்த சிலைகளைப் புனரமைப்பதாகக் கூறி பல லட்சம் ரூபாய்களை யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலை புனரமைக்க உரிய அனுமதி பெறாமல் பணம் வசூலித்ததாகவும், அப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை இந்து சமய அறநிலையத் துறையில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த தேவைக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கார்த்திக் கோபிநாத் மீது புகார் எழுந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர்.  

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், வசூல் செய்த பணத்தில் ஒரு பங்கைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார் என ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நியூஸ் கார்டின் டிசைன், தமிழ் ஃபாண்ட் என எதுவும் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. எனவே, இது போலியானது என்று தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு நடத்தினோம்.

முதலில் ஜூனியர் விகடன் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. கார்த்திக் கோபிநாத் தொடர்பாக ஜூனியர் விகடன் செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா, அதில் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளதா என்று பார்த்தோம். அவர் கைது செய்யப்பட்ட செய்தியை விகடன் வெளியிட்டிருந்தது. ஆனால், வசூல் செய்த பணத்தில் அண்ணாமலைக்கு பங்கு என்று அவர் குறிப்பிட்டதாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. இது குறித்து ஜூனியர் விகடனுக்கான சமூக ஊடக பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார்.

இதன் அடிப்படையில், மிஷனரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக பொய் பரப்பி ரூ.33 லட்சம் வசூல் செய்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தொடர்பு உள்ளது என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோயில் சிலைகள் உடைப்பு தொடர்பாக வதந்தி பரப்பி பணம் வசூலித்ததில் அண்ணாமலைக்கும் பங்கு என கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கோயில் சிலை உடைப்பு, பணம் வசூலில் அண்ணாமலைக்கும் தொடர்பு என்று யூடியுபர் கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False