
அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க-வைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் – அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயகுமார்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க தலைவர்கள் கூறி வந்தனர். பா.ஜ.க-வால் தான் தோற்றேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது, மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உருவாகி உள்ளது. இந்த சூழலில் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் கூறியதாக நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பார்க்க பாலிமர் செய்திகள் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. ஆனால், ஜெயக்குமார் என்பதை ஜெயகுமார் என்றும், முன்னாள் என்பதை ‘முன்னால்’ என எழுத்துப்பிழையுடனும் நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்ததாக எந்த செய்தியும் இல்லை. அவருடைய சமூக ஊடக பக்கங்களிலும் கூட அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால், இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்று ஆய்வு செய்தோம்.
முதலில் பாலிமர் செய்தியின் சமூக ஊடக பக்கங்களில் இப்படி ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை. எனவே, பாலிமர் செய்திகள் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை வாட்ஸ்அப்-ல் அனுப்பி வைத்தோம். அந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர் உறுதி செய்தார்.
அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று பாலிமர் டிவி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:அதிமுக-வில் இருந்து விலகுவதாக ஜெயக்குமார் அறிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False
