தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகலப்பாதை அமைக்கும் பணியைக் கைவிடும்படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகத் தகவல் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய நிலையில், அந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை தொடர்பாக பேசிய வீடியோ மற்றும் அவர் அளித்த பேட்டி அடிப்படையில் வெளியான நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் கார்டில், “தமிழக அரசால் பறிபோன திட்டம்? – மதுரை – தூத்துக்குடி இடையே அகண்ட ரயில் தண்டவாளம் அமைக்கும் திட்டம். தமிழக அரசு வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாகச் சொல்லிவிட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரை – தூத்துக்குடி இடையே நேரடி புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாடு அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. எனவே, திட்டம் கைவிடப்பட்டது” என்றார்.

இதற்கு தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தார். அப்படி எந்த ஒரு கடிதத்தையும் எழுதவில்லை. இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் 2024 ஆகஸ்ட் 19ம் தேதி கடிதம் எழுதப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனாலும், தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்காமல் அ.தி.மு.க மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன

இந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் இன்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

உண்மைப் பதிவைக் காண: indiatoday I Archive

அதில், “2025 ஜனவரி 10ம் தேதி சென்னை ஐசிஎஃப்-ல் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்த போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு ரயில்வே திட்டங்கள் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ஒருவர் மதுரை – தூத்துக்குடி புதிய ரயில்பாதை திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். 

அந்த நேரத்தில் தொழிற்சாலையில் நிலவிய அதீத சப்தம் காரணமாக அமைச்சரால் அந்த கேள்வியை சரியாக கேட்க முடியவில்லை. தனுஷ்கோடி ரயில் திட்டம் தொடர்பாக கேட்கப்படுவதாக அவர் காதில் விழுந்துள்ளது. தனுஷ்கோடி திட்டத்தைச் செயல்படுத்தினால் நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் எழலாம் என்பதால் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டது என்று அமைச்சர் பதில் அளித்தார். அமைச்சரின் அந்த பதிலை பத்திரிகையாளர்கள் மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் தொடர்பான பதில் என்று கருதியதால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் தொடர்பாக எந்த ஒரு நிலம் தொடர்பான பிரச்னையும் தமிழ்நாடு அரசுடன் இல்லை என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். தொழிற்சாலையிலிருந்த அதீத இரைச்சல், சப்தம் காரணமாகவும் மாநில மற்றும் தேசிய ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் உள்ள ரயில்வே திட்டங்கள் தொடர்பான கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

ரயில்வே துறை விளக்கம் அளித்தாலும், ஐந்து நாள் தாமதம் ஏன் என்று மதுரை எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். நாம் அந்த சந்தேகத்திற்குள் செல்லவில்லை. ரயில்வே அமைச்சர் அளித்த பதில் தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. இதனால், இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது. மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டதால் கைவிடப்பட்டது என்று பரவும் தகவலும் தவறானது என்பது உறுதியாகிறது. 

தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டதால் திட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அமைச்சர் பேசியது உண்மை. ஆனால் நிருபர் கேட்டதோ மதுரை – தூத்துக்குடி பற்றி… ஆனால் அமைச்சரோ தனுஷ்கோடி திட்டம் தொடர்பாக பதில் அளித்துள்ளார். இதனால் குழப்பம் ஏற்பட்டிருப்பது தெளிவாகிறது. தற்போது, அமைச்சர் தரப்பில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துவிட்டது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பாக நிருபர் கேட்ட கேள்வி சரியாக காதில் விழாததால் தனுஷ்கோடி திட்டம் தொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலால் குழப்பம் ஏற்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False