
பீகாரில் ராகுல் காந்திக்குத் திரண்ட கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒரு மிகப்பெரிய மைதானம் முழுக்க மக்கள் இருப்பது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 மார்ச் 4ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகாரில் ராகுல் காந்திக்கு கூடிய கூட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் புகைப்படம் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த புகைப்படத்தை 2017ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படம் 2024ம் ஆண்டு ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் புகைப்படம் இல்லை என்பது தெளிவானது.
அதே நேரத்தில் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று லாலு பிரசாத் எக்ஸ் தள பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த பலரும் தெரிவித்திருந்தனர். எனவே, இது தொடர்பாகவும் ஆய்வு செய்தோம். 2017ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தள மாநாடு தொடர்பான செய்தி, புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது லாலு பிரசாத் யாதவ் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்று சில செய்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive
மேலும், ஏஎன்ஐ செய்தி ஊடகம் அந்த மாநாடு தொடர்பாக வெளியிட்டிருந்த புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன. அதில், அரை மைதானம் அளவுக்கு மக்கள் கூடி இருந்ததைக் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பதையும் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதையும் உறுதி செய்தன.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பீகாரில் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் கூட்டம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையில்லை என்றும், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பீகாரில் ராகுல்காந்தி மாநாட்டுக்கு கூடிய மக்கள் என்று பரவும் புகைப்படம் 2017ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘பீகாரில் ராகுல் காந்திக்கு வந்த கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
