
சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச் சென்ற புகைப்படம் உ.பி-யில் மனிதனுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று குறிப்பிட்டு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
முதியவர் ஒருவர் இறந்த பெண்மணியின் உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இத சொன்னா டம்ளரு, கிளாசுன்னுவாங்க.. குரங்கு குப்பன் ஆளும் உ.பில மாட்டுக்கு மட்டும் தான் ஆம்புலன்ஸ் மனுஷனுக்கு கிடையாது.. #முதியவர் இறந்த தன் மனைவியை எடுத்துச்செல்ல படும் அவஸ்தை தான் இது..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை மார்க்ஸ்பிரியன் சோ.கோவிந்தராசன் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நேரத்தில் முதியவர் ஒருவர் தன் மனைவியின் உடலை சைக்கிளில் தூக்கிச் சென்ற புகைப்படம் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த படத்தை இப்போது பகிர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் மனிதர்களுக்கு ஆம்புலன்ஸ் இல்லை, மாடுகளுக்கு மட்டும்தான் என்று பகிர்ந்து வருகின்றனர்.
இந்த முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா, புகைப்படத்தின் பின்னணி என்ன என்று அறிய ஆய்வு செய்தோம். மனைவியின் உடலை சைக்கிளில் தூக்கிச் சென்ற முதியவர், உத்தரப்பிரதேசம் என்று சில கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, ஏப்ரல் 29, 2021 அன்று வெளியான பல செய்திகள் கிடைத்தன. உத்தரப்பிரதேசத்தின் ஜாவுன்பூர் மாவட்டத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரியவந்தது. 2021 ஏப்ரல் என்பது கொரோனா 2ம் அலை உச்சத்திலிருந்த காலமாகும்.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I indiatoday.in I Archive 2
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த செய்தியில், “படத்தில் உள்ள 70 வயதான முதியவரின் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 26, 2021 அன்று இறந்துவிட்டார். அவரது உடலை அவரது கிராமத்தில் உள்ள வீட்டுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். உடல் வீட்டுக்கு வந்த பிறகு இறுதி சடங்கு செய்ய கிராம மக்கள், உறவினர்கள் என யாரும் முன்வரவில்லை. எனவே, சைக்கிளில் உடலை சுமந்துகொண்டு மயானத்துக்கு சென்றுள்ளார். வழியில் தடுமாறி சைக்கிளுடன் கீழே விழுந்துவிட்டார்.
அதன் பிறகு உடலை எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அங்கேயே அவர் அமர்ந்துவிட்டார். அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமின்றி இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி என முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் இந்த செய்தி அப்போது வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive
என்டிடிவி வெளியிட்டிருந்த செய்தியில், முதியவர் தன் மனைவியின் உடலை சாலையில் வைத்துள்ளார் என்ற தகவல் அறிந்ததும் இறுதிச் சடங்குக்குத் தேவையான பொருட்களுடன் போலீசார் அங்கு வந்தனர். இஸ்லாமியர்கள் சிலர் உதவியுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய தேடலில் India Legal Aid Centre அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பிரதீப் ராய் என்பவர் உ.பி அரசை குற்றம்சாட்டி இந்த படத்தை 2021 பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதன் பிறகு அவரே, ஜான்பூர் போலீசிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு ஜாவுன்பூர் (Jaunpur) போலீஸ் வெளியிட்டிருந்த ட்வீட்டை ஷேர் செய்திருந்தார். அதில், “இது பற்றிய தகவல் ஏப்ரல் 26, 2021 அன்று கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மதியாஹு சென்றார். இறுதிச் சடங்குக்குத் தேவையான பொருட்கள் கொண்டுவரப்பட்டு, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமக்கு அந்த ட்விட் உண்மை பதிவு நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் முதியவருக்கு தன் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பதை உறுதி செய்தன.
நம்முடைய ஆய்வில்,
உத்தரப்பிரதேசத்தில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சைக்கிளில் எடுத்துச் சென்ற முதியவர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இறந்தவர் என்பதால் இறுதிச் சடங்கு செய்ய மக்கள் யாரும் முன்வராததால் அந்த முதியவர் சைக்கிளில் உடலை எடுத்துச் சென்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல் உண்மையாக இருந்தாலும், அது நடந்த காலகட்டம் வேறொன்று; தற்போதைய அரசியல் சூழலுக்கு தொடர்புடையதல்ல என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் 2021ல் கொரோனாவில் உயிரிழந்த தன் மனைவியின் உடலை முதியவர் ஒருவர் இறுதிச் சடங்கு செய்ய சைக்கிளில் கொண்டு சென்ற படத்தை யோகி ஆதித்யநாத் ஆட்சியில் இறந்தவர் உடலைக் கூட கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வழங்கப்படுவதில்லை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:உ.பி-யில் மனைவியின் உடலை எடுத்துச் செல்ல முதியவருக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதா?
Written By: Chendur PandianResult: Missing Context
