
தி.மு.க-வை விமர்சித்தபடி உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவில் இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்னு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “கூகுளில் விஞ்ஞான ஊழல் என்று சர்ச் செய்து பார்க்கவும் அது உடனே திமுகவின் ஊழல்களை காட்டுகிறது. ஊழல் என்றால் உலகிற்கு நினைவுக்கு வருவது திமுகதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை இலவச சட்ட ஆலோசனை மையம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சரத் சுப்பிரமணியம் என்பவர் 2021 மார்ச் 6 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விஞ்ஞானம் என்றால் எதையும் ஆய்வுக்கு உட்படுத்தி உண்மையை உறுதிப்படுத்துவது ஆகும். உறுதிசெய்ய முடியாததை அறிவியல் ஏற்பது இல்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருந்தால் கட்டாயம் அது நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். விஞ்ஞானம் என்பதன் அடிப்படை கூட புரியாமல் விஞ்ஞான முறையில் ஊழல் என்று பதிவிட்டுள்ளனர்.
தி.மு.க ஊழல் கட்சியா, விஞ்ஞான முறைப்படி அதாவது இவர்கள் எண்ணப்படி கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு ஊழல் செய்ததா என்ற ஆய்வுக்குள் எல்லாம் நாம் செல்லவில்லை. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மட்டுமே நடத்தினோம்.
இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படத்தை ஃபேஸ்புக் மட்டுமின்றி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் விதவிதமாக எடிட் செய்து பலரும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது.
2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் பிடித்ததாக பலரும் பதிவிட்டிருந்தனர்.
தொடர்ந்து தேடியபோது இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் 2020 ஜூன் 29ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போலீசுக்கு முன்பே கோபம் இருந்துள்ளதும் தெரியவருகிறது. போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்?#ArrestKillersOfJayarajAndBennix” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை எடுத்து எடிட் செய்து விஷமத்தனமான கருத்தைச் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தி.மு.க-வை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் பிடித்ததாக பகிரப்படும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தி.மு.க-வை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பிடித்த போஸ்டர்!- வைரல் போட்டோஷாப்
Fact Check By: Chendur PandianResult: Altered
