
தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சரியில்லை என்று அதை மாணவர்கள் கீழே கொட்டினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பள்ளி மாணவர்கள் உணவை ஒரு பக்கெட்டில் கொட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Ohh… ஸ்டாலின் ஆட்சியில்
இது தான் காலை உணவு திட்டமா.. #DMKFailsTN #GetOutStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அரசு வழங்கும் காலை உணவு நன்றாக இல்லை என்று மாணவர்கள் கீழே கொட்டியதாக வீடியோ ஒன்றைப் பலரும் வைரலாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்த மாணவர்களைப் பார்க்கும் போது தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் போல இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்தது என்பது தெரியவந்தது. ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள தேவனிசெருவு எம்பிபி பள்ளியில் (Devanicheruvu MPP School) இந்த சம்பவம் நடந்ததாக பல பதிவுகள் நமக்கு கிடைத்தன.
ஆந்திர ஊடகங்கள் பலவும் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தன. மேலும், தரமில்லாத உணவு வழங்கியதற்காக ஆந்திர மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் மன்னிப்பு கேட்டதாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. மேலும், உணவை கீழே கொட்டிய மாணவர்களிடம் ஆந்திர போலீசார் பேசியது தொடர்பான வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. இவை எல்லாம் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்தன.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தரமற்ற உணவு வழங்கப்படதற்கு அம்மாநில அமைச்சர் மன்னிப்பு கேட்டுக்கொண்ட செய்திகளும் நமக்கு கிடைத்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆந்திர அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் தரமற்ற மதிய உணவு வழங்கப்பட்டதாக கூறி அதை மாணவர்கள் கீழே கொட்டிய வீடியோவை தமிழ்நாட்டில் ஸ்டாலின் அரசு வழங்கிய காலை உணவு என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


