நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

நிலவில் இருந்து பூமி தெரிவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "#viralpost | நிலவிலிருந்து சந்திரயான் 3 அனுப்பிய புகைப்படம்... நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை RJ Saru என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 27ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிலவை ஆராய சந்திரயான் 1-ஐ இந்தியா 2008ம் ஆண்டு அனுப்பியது. அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பப்பட்டுள்ளது. அது நிலவின் தென்பகுதியில் இறங்கி சாதனை படைத்துள்ளது. இதை வைத்து சமூக ஊடகங்களில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நிலவில் இருந்து சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று ஒரு படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எந்த ஒரு அதிகாரப்பூர்வ பதிவையும் இஸ்ரோ தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை இஸ்ரோ வெளியிட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து இஸ்ரோவின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தைப் பார்த்து வரும் நமக்கு இந்த புகைப்படம் இஸ்ரோ வெளியிட்டது இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

முதலில் நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டதா என்பதை உறுதிசெய்ய அதன் எக்ஸ் (ட்விட்டர் ) பக்கத்தை பார்த்தோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த படத்தையும் இஸ்ரோ வெளியிடவில்லை என்பது தெளிவானது. ரோவர் நிலவில் இறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. அதிலும் கூட நிலவில் இருந்து பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டதாக பதிவு இல்லை.

உண்மைப் பதிவைக் காண: wionews.com I Archive

அடுத்தாக இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, wionews.com என்ற ஊடகம் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே நிலவின் மேற்பரப்பில் இருந்து பூமியை பார்த்தால் எப்படி இருக்கும் என்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படங்கள் என்று குறிப்பிட்டுப் பதிவை வெளியிட்டிருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த செய்தி ஊடகம் மிகவும் தெளிவாக இது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 அனுப்பிய நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நிலவில் இருந்து பூமி எப்படி இருக்கும் என செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படத்தை சந்திரயான் 3 எடுத்த புகைப்படம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சந்திரயான் 3 அனுப்பிய பூமியின் புகைப்படம் என்று பரவும் AI வரைபடம்!

Written By: Chendur Pandian

Result: False