
கார், பைக் கழுவிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தண்ணீரை பீய்ச்சி அடித்து கோவிலை சுத்தம் செய்யும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா கடைசில இதான்டா நடக்கும்…!!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தி.மு.க கேடு தரும் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் பல சாதியைச் சார்ந்த இளைஞர்கள் தமிழக திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு எதிராகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தொடர்ந்து விஷமத்தமான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே பதவியில் இருந்த அர்ச்சகர்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக வந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக வதந்தி பரவியது. இது பற்றி நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் கோவிலை தூய்மை செய்யும் படத்தை பகிர்ந்து, கார், பைக் கழுவுகிறவர்களை எல்லாம் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமித்துள்ளது என்று விஷமத்தனமான பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வரவே, உண்மை என்ன என்று அறிய ஆய்வு செய்தோம்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஜூலை மாதம் முதல் வாரத்தில் கொரோனா முழு ஊரடங்குக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்ட போது, இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. அப்போது கூட அர்ச்சகர்களை விமர்சித்து சில விஷமிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எனவே இந்த படத்தை தேடி எடுத்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, தி இந்து உள்ளிட்ட பல முன்னணி ஊடகங்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள அர்ச்சகர் கோவில் மேல் பகுதியைத் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் புகைப்படம் 2021 ஜூலை 4ம் தேதி வெளியாகி இருப்பது தெரிந்தது. தி இந்து, தினத்தந்தி, மாலைமலர் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகளில் இந்த புகைப்படம் கோவையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive 1 I dailythanthi.com I Archive 2 I maalaimalar.com I Archive 2
இது தொடர்பான வீடியோ ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தோம். அப்போது தமிழ்நாடு அரசை விமர்சித்து ஒருவர் வெளியிட்டிருந்த பதிவுக்கு கமெண்ட் பகுதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கோவில் சிலைகள் மீது படாமல், வெளிப்புறத்தை மட்டும் அந்த அர்ச்சகர் சுத்தம் செய்வதை காண முடிந்தது.
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமித்தது பணி நியமன ஆணை வழங்கியது 2021 ஆகஸ்ட் 14ம் தேதியாகும். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து சாதிரியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட வேறு சாதியைச் சார்ந்தவர் என்பது தவறான தகவல் என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
கார், பைக் வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தவர்களை அழைத்து வந்து பணி நியமனம் செய்யப்பட்டதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது 2021 ஆகஸ்ட் 14ம் தேதி.
தண்டு மாரியம்மன் கோவிலில் தூய்மைப் பணி செய்யப்பட்டதாக படம் வெளியான தேதி 2021 ஜூலை 4.
இதன் மூலம் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு 2021 ஜூலை மாதம் கோவில் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படத்தை வைத்துக்கொண்டு சாதி வன்மத்துடன் கார், பைக் கழுவுகிறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்கிவிட்டார்கள் என்று தவறான தகவல் பரப்பி வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கார், பைக் கழுவுகிறவர்களை எல்லாம் அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்தது என்று பரவும் படம் அர்ச்சகர் நியமனத்துக்கு முன்பு லாக்டவுன் தளர்வு சமயத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கார், பைக் கழுவியவர்களை அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
