
பட்டின பிரவேச பல்லக்கைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தூக்க அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தருமபுரம் ஆதீனம் பதில். மரபாக சைவ வெள்ளாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் அண்ணாமலை அவர்களுக்கு பட்டின பிரவேச பல்லக்கை தூக்க அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் – ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்” என்று இருந்தது.
இந்த பதிவை முதுகுடுமி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தருமபுரம் ஆதீனத்தில் காலம் காலமாக ஆதின கர்த்தரை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் வீதியுலா செல்வது வழக்கம். இதற்கு பட்டின பிரவேசம் என்று பெயர். மனிதனை, மனிதன் தோளில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தடை விதித்தார்.
இந்த சூழலில், ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் வருவேன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதற்கு ஆதீனம் தரப்பில் பதில் அளித்தது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
உண்மையில் ஆதீனம் தரப்பில் இப்படி ஏதும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆதீனத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறிய செய்தி மட்டுமே கிடைத்தது.
இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் வித்தியாசமாக இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டதா என்று பார்த்தோம். அதன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதையும் பாலிமர் தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று தெரிந்தது.
சமூக ஊடகங்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த நியூஸ் கார்டு வைரலாக பகிரப்படவே, “FAKE” முத்திரையுடன் இதை பாலிமர் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் பட்டின பிரவேசத்தில் பல்லக்கைத் தூக்க அண்ணாமலைக்கு அனுமதியில்லை என்று ஆதீனம் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.
முடிவு:
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பல்லக்கைத் தூக்க அனுமதி இல்லை என்று ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
