சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சென்னை மழை வெள்ளத்தில் முதலை ஒன்று வந்ததாகச் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வீட்டின் முன்பு மழை வெள்ளத்தில் முதலை இருப்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. பாஜக ஆதரவு பக்கத்தில் புகைப்பட பதிவு வெளியிட்டிருப்பதாலும், கமெண்ட் பகுதியில் இந்த புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது போல விடியல், தத்தி என்று தி.மு.க-வை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பதிவிட்டு வருவதாலும் இந்த புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2021ம் ஆண்டு தாய் மொழியில் வெளியான ஃபேஸ்புக் பதிவில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை. அதே போன்று இந்த புகைப்படத்தை சில பிளாக்குகளிலும் பயன்படுத்தியிருந்தனர்.

தாய்லாந்து மழை வெள்ளத்தில் வந்த முதலை என்று குறிப்பிட்டு சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், உறுதியான தகவல் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் 2021 செப்டம்பரிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. 

உண்மைப் பதிவைக் காண: 9gag.com 

இவை எல்லாம் இந்த புகைப்படம் 2023 சென்னை மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வெள்ளத்தில் வந்த முதலை என்று பரவும் புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: False