
கீழடி பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது “இதெல்லாம் புராணம் படித்திருக்க வேண்டும்” என்று கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் சிறு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “நிருபர்: கீழடியை பத்தி அதிமுகவோட நிலைப்பாடு என்ன எடப்பாடி: கீழடியை பத்தி நிறைய படிக்கணும்ங்க “டேபிளுக்கு அடியில ” “காலடியை” பத்தி கேளுங்க பதில் சொல்றேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2023ம் ஆண்டில் ஆரியம், திராவிடம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சியின் பெயரிலேயே “திராவிட” வைத்துள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி சொல்லனும்னா பெரிய ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு செய்தால்தான் இது உண்மையா பொய்யா என்பது தெரியும். அதுக்கு நான் உட்பட்டவன் இல்லை” என்று கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டியை வைத்து நிருபர்கள் பெரியார் பற்றி, மாநில சுயாட்சி பற்றி கேள்வி எழுப்பிய போது என்று வதந்தி பரவியிருந்தது. தற்போது மீண்டும் அதே பேட்டியை எடப்பாடி பழனிசாமியின் கீழடி நிலைப்பாடு என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை 2023ம் ஆண்டு நியூஸ் 18 தமிழ்நாடு, சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட வீடியோவை பார்த்தோம். அதில் தொடக்கத்திலேயே (0.10 விநாடிகள் அளவில்) நிருபர், “ஆளுநரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஆரியமும் இல்லை, திராவிடமும் இல்லை, சுதந்திரப் போராட்ட தியாகிகளை எல்லாம் சாதிய தலைவர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்” என்று கேள்வியைக் கேட்கிறார்.
கேள்வியை முடிப்பதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அப்போது, “இதெல்லாம் புராணம் படிக்கனும். நான் அந்த அளவுக்கு படிச்சவன் இல்லை, இந்த மாதிரியான கதை எல்லாம் படிச்சி சொல்லனும்னா பெரிய ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வு செய்தால்தான் இது உண்மையா பொய்யா என்பது தெரியும். அதுக்கு நான் உட்பட்டவன் இல்லை” என்கிறார்.
உடனே நிருபர் அப்படி என்றால் ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என்கிறீர்களா என்று பதில் கேள்வி கேட்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, “ஆமாம், அதுக்கு என்ன பண்றது, அவர்கிட்டதான் கேட்கனும். அவர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் எனக்கென்ன தெரியும்? இது உண்மையா பொய்யா என்பதற்கு இதை ஆய்வு செய்தால்தான் தெரியும்” என்கிறார்.
ஆரியம், திராவிடம் பற்றி 2023ம் ஆண்டு நிருபர் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலை, கீழடி ஆய்வுக்கு அவர் அளித்த பதிலாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
2023ம் ஆண்டு ஆரியம் – திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலை கீழடி தொடர்பாக அளித்த பேட்டி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:எடப்பாடி பழனிசாமியின் “கீழடி நிலைப்பாடு” என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
