
திருப்பூரில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், வட இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் குழந்தை கடத்த திருப்பூர் வந்துள்ளதாகவும் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived link |
கைவிலங்கு போடப்பட்ட இளைஞர்கள் ஐந்து பேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள குழந்தை கடத்தல் கும்பலில்.. 5 பேர் திருப்பூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 பேருக்கு மேல் குழந்தை கடத்தல்காரர்கள் வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்துள்ளதாக இவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தமிழர்களே குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
வட மாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறதுன்னு யாரோ ஒரு மகான் சொன்னது, காதில் ஒலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, அச்சம் தவிர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 19 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குழந்தைகளைத் திருடும் 200க்கும் மேற்பட்ட நபர்கள் வந்துள்ளதாக பீதியைக் கிளப்பியுள்ளனர். இது போன்ற பீதியால் சில ஆண்டுகளுக்கு முன்பு குல தெய்வ கோவிலுக்கு சென்ற பெண் அடித்துக் கொல்லப்பட்டார். 62 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வாட்ஸ்அப்பில் வதந்தியை பரப்பியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது மீண்டும் குழந்தை கடத்தல் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. திருப்பூரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக இதில் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று அறிய முதலில் கூகுளில் தேடினோம். நமக்கு அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்றனர்.
Search Link |
படத்தில் உள்ளவர்கள் யார் என்று அறிய படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, குழந்தை கடத்தல் கும்பல் சிக்கியது என்று இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்தது.
இது தொடர்பாக நியூஸ் மினிட் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் 2018ம் ஆண்டு இதே படத்தை வைத்து பெங்களூருவில் குழந்தை கடத்தல் கும்பல் சிக்கியது என்று செய்தி பரவியதாக குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து பெங்களூரு நகர போலீசிடம் விசாரித்தபோது இந்த படம் மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
thenewsminute.com | Archived Link | Search Link |
நம்முடைய ஆய்வில்,
திருப்பூரில் குழந்தை கடத்தல் கும்பல் கைது தொடர்பாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
குழந்தை கடத்தல் கும்பல் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த படம் மற்றும் தகவல் 2018ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வட இந்தியாவிலிருந்து குழந்தை கடத்த வந்த ஐந்து பேர் கும்பல் கைது செய்யப்பட்டது என்ற தகவல் மற்றும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திருப்பூரில் குழந்தை கடத்தில் ஈடுபட்ட கும்பல் கைது?- பதற்றத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
