ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி!
ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா என்று Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று செய்தியை பலரும் வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறிவோம்:
சமயம் தமிழ், தினத்தந்தி, தமிழ் ஒன் இந்தியா என்று தமிழின் முன்னணி ஊடகங்களில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி வெளியாகி இருந்தது. எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது என்றால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தோம்.
சமயம் தமிழ் வெளியிட்ட செய்தியில், “அயோத்தி பூமி பூஜை நடக்கும் இன்றைய தினத்தில் ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக ஆதரவாளர்கள், “இது கடவுள் தரும் சோதனைதான்” என கமெண்டுகளை பதிவிடும் அதே வேளை, “கடவுள் இருக்கிறார், இது வெறும் தொடக்கம்தான்” என பாஜக எதிர் தரப்பினர் கூறி வருகின்றனர்” என்று இருந்தது. முன்னணி ஊடகங்களிலும் அது போலவே செய்தி இருந்தது.
ட்விட்டரில் வேறு வேறு தகவலை கண்காணித்துக் கொண்டிருந்த போது Bar & Bench எனும் நீதிமன்றம் தொடர்பான தகவல்களை வெளியிடும் ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று வெளியான தகவல் தவறு என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ரஞ்சன் கோகாயிடம் இது பற்றி விசாரித்ததாகவும், இந்த தகவல் தவறானது என்று அவர் உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
Bar & Bench என்பது மிகவும் நம்பகமானது என்பதால், இந்த ஒரு தகவலை வைத்து பலரும் ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று என்று பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.
தமிழில் நக்கீரன் உள்ளிட்ட ஆன்லைன் செய்திகளில் ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா இல்லை என்று செய்தி வெளியிட்டிருந்தன. ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில் யாரோ வதந்தி கிளப்பிவிட, அது உண்மை என்று நம்பி பலரும் செய்தி வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில் ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.