
‘’கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இன்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் நபர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
வயதான முதியவர் தனது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க நடந்துசெல்லும் இந்த புகைப்படத்தை தற்போதைய இந்திய அரசியலுடன் தொடர்புபடுத்தி பலர் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் போதிய போக்குவரத்து வசதி, உரிய வருமானம் இல்லாத காரணத்தால், புலம்பெயர்ந்து வாழும் கூலித் தொழிலாளர்கள் பலர் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் நாடு முழுக்க அரசியல் ரீதியாக விமர்சிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் மேற்கண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. ஆனால், இந்த படத்திற்கும், தற்போதைய இந்திய சமூக அவலத்திற்கும் தொடர்பு இல்லை.
இது வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இதன்படி, மியான்மரில் நடந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீதான அடக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்கள், வங்கதேசம் உள்பட பல்வேறு தென்கிழக்காசிய நாடுகளில் அகதியாகக் குடியேறியுள்ளனர். அவர்களில் பலர் கடந்த 2017ம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள Cox’s Bazaar பகுதியில் கண்ணீர் மல்க, வேதனையுடன் அடைக்கலம் புகுந்தபோது எடுத்த புகைப்படங்களில் ஒன்றுதான் இது.

இதுதொடர்பான செய்திகள் பல 2017ம் ஆண்டு வெளியாகியுள்ளன. அவற்றில் இருந்து இதுபோன்ற சில புகைப்படங்களை எடுத்து, இந்திய மக்களுடன் தொடர்புபடுத்தி தற்போது சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், அவற்றை எங்களது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி வையுங்கள்.

Title:கொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
