
‘’திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதில், கலவர காட்சி ஒன்றை இணைத்து, அதன் கீழே சு.வெங்கடேசன் எம்பியின் புகைப்படத்தையும் வைத்துள்ளனர். அதன் அருகில், ‘’மதுரை கம்யுனிஸ்ட் வேதனை. திமுகவிடம் ரூ.25 கோடி வாங்கியதால் எங்களை பிச்சைக்காரர்கள் என அழைப்பதை ஏற்க முடியாது – சு.வெங்கடேசன் எம்பி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நமக்கு முதலில் தோன்றியது. காரணம், திமுக – சிபிஎம் கட்சியின் கூட்டணியை கிண்டல் செய்யும் நோக்கில் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட போலி செய்தியாக இது அமைந்துள்ளது.
எனினும், வைரலாக பகிரப்படுவதால், இப்படி ஒருவேளை ஜெயா பிளஸ் செய்தி வெளியிட்டதா இல்லையா என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நமது வாசகர்கள் சிலர் இதுபற்றி வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு வேண்டுகோள் விடுத்ததால், இதுதொடர்பாக, ஜெயா பிளஸ் ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@jayapluschannel) சென்று விவரம் தேடினோம்.
அப்போது, கடந்த பிப்ரவரி 26, 2020 அன்று சு.வெங்கடேசன் பற்றி ஜெயா பிளஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. ஆனால், அதில் வேறு ஒரு தகவல் உள்ளது. அதனை எடுத்து, எடிட் செய்து சிலர் பகிர்ந்து வருவதாக, தெரிகிறது.

எனவே, டெல்லியில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தபோது, ஜெயா பிளஸ் அதனை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதனை எடுத்து, எடிட் செய்து, தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:திமுகவிடம் பணம் வாங்கியதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஒப்புக் கொண்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
