
தந்தை பெரியார் படத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

தந்தை பெரியார் படத்துக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற படத்தை வைத்து பதிவை உருவாக்கி உள்ளனர். அதில், “அய்யா தந்தை பெரியாரே இனிமே தமிழ்நாட்டிலே உங்களை விட்டா எங்களுக்கு வேறுநாதி இல்லை. ராமரை, மொழி, மதம் வெச்சி எல்லாம் கதறி பார்த்தோம் ஒன்னும் பருப்பு வேகலை. இனி வேறு வழியில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவை இளஞாயிறு நண்பர்கள் குழு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Arunachalam Elagnairu என்பவர் 2020 ஆகஸ்ட் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால், இதுபற்றி ஆய்வு நடத்தினோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது 2014ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படத்துக்கு மோடி மரியாதை செய்த படத்தை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதன் அசல் படத்தைத் தேடினோம். அப்போது கெட்டி இமேஜில் அந்த படம் இருப்பது தெரிந்தது.

கெட்டி இமேஜில் தேடிய போது அசல் படம் கிடைத்தது, அதில் 2014ம் ஆண்டு மே 28ம் தேதி சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் அசல் படத்தை எடுத்து, எடிட் செய்து பெரியார் படத்தை வைத்து அதற்கு மோடி அஞ்சலி செலுத்துவது போன்று தவறான தகவல் பகிரப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தந்தை பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்திய மோடி; புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
