பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?
பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், "பெரியார் சிலை என நினைத்து... வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசிய சங்கிகள். கருத்துதான் குருடு என்றால் கண்ணுமாடா குருடு. தமிழகரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Sasibala என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் பூசப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் மீது காவி பெயிண்ட் பூசப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. கடந்த ஆண்டு திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசப்பட்டது பிரச்னை ஆனது, அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டு, தீபாராதணைக் காட்டி சர்ச்சை வேறு திசையில் பயணித்தது. அப்படி இருக்கும்போது இந்த தகவல் புதுத் தகவலாக இருந்தது. எனவே, ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இது 2019ம் ஆண்டு தஞ்சாவூரில் சாணி விச்சுக்கு ஆளான திருவள்ளுவரின் சிலை என்பது தெரிந்தது. காவி பெயிண்ட் எதுவும் இந்த சிலைக்கு பூசப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று தேடியபோது எந்த செய்தியும் கிடைக்கவில்லை. தஞ்சாவூரில் உள்ள ஊடகவியலாளர்களிடம் கேட்டபோது, இது தொடர்பாக பா.ஜ.க, இந்து அமைப்புக்கள், பெரியாரிய அமைப்புக்கள் என அனைத்து தரப்பிலும் விசாரிக்கப்பட்டது. ஆனால், யார் இதை செய்தார்கள் என்று தெரியவில்லை. யாரும் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கவில்லை என்றனர். எனவே, தஞ்சை தமிழ் பல்கலைக் கழக காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். அப்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் என்று யாரும் கைது செய்யப்படவில்லை என்று உறுதி செய்தனர்.
நம்முடைய ஆய்வில்,
பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் பூசப்பட்ட சம்பவம் கோவையில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படம் கடந்த ஆண்டு நம்பவர் மாதம் தஞ்சாவூரில் சாணி வீச்சு சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிலை மீது சாணி மட்டுமே வீசப்பட்டது. அதன் பிறகு திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதன் மூலம், பெரியார் சிலை என்று நினைத்து திருவள்ளுவர் சிலை மீது காவி பெயிண்ட் பூசப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False