
100 சதவிகிதம் கொரோனாவைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
“கொரானாவுக்கு எளிய மருந்து!” என்று போட்டோ பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 100% கொரோனாவை தடுத்துவிடலாம். எத்தனை பேருக்கு உங்களால் உதவ முடியுமோ உதவுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழலில், அது தொடர்பான வதந்திகளும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரத் தொடங்கியுள்ளது. கொரோனாவை நூறு சதவிகிதம் தடுக்கும் வீட்டு கைவைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று பலரும் ஒரு தகவலைப் பதிவிட்டு வருகின்றனர். 2020ம் ஆண்டு கொரோனா பரவலின் போது புதுச்சேரியை சார்ந்த மாணவர் கண்டுபிடித்த மருந்து என்று இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அப்போதே இந்த தகவல் தவறானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
தற்போது அந்த பதிவை சற்று மாற்றி, மும்பை கண்டுபிடித்தது என்றும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்த அரசு அங்கீகரித்தது என்று அதில் இல்லை. எனவே, மத்திய – மாநில அரசு தரப்பில் ஏதேனும் அறிவிப்பு வௌியாகி உள்ளதா என்று பார்த்தோம்.
உண்மைப் பதிவைக் காண: who.int I who.int I Archive
2020-21ல் கொரோனா உச்சத்திலிருந்த போது உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று வதந்தி பரவியது. அப்போது உலக சுகாதார நிறுவனம் தரப்பில் உண்மையா… பொய்யா? என்று கொரோனா தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் தவறான கருத்துக்கள் தொடர்பாக பதிவு வெளியாகி இருந்தது. அதில், “இஞ்சி, தேன் மற்றும் மிளகு ஆகியவை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்ற தகவலுக்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை. இருப்பினும், (மிளகு போன்ற) சில மசாலா பொருட்களில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மையைத் தரலாம் என்று கருதப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய சுகாதார அமைச்சகம் தரப்பிலிருந்து இப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் MyGovIndia என்ற இந்திய அரசின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2021 ஏப்ரல் 28ம் தேதி வௌியான பதிவில், “மிளகு, தேன், இஞ்சி சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்தால் கொரோனா வராமல் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் பக்கத்தில், “கொரோனாவைத் தடுக்கும் நாட்டு மருந்தை அரசு அங்கீகரித்ததாகப் பரவும் தவறான தகவல்!” என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசு அல்லது இந்திய அரசு இந்த வீட்டு வைத்திய முறையை கொரோனாவை 100 சதவிகிதம் தடுக்கும் மருந்து என்று அங்கீகரித்ததாகப் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் ஸ்பூன் இஞ்சி சாறும் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொரோனாவைத் தடுக்கலாம் என்றும் இந்த மருந்துக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும் பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
